தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட வெளிநாடு வாழ் தமிழர்கள்

சென்னை : குவைத், பக்ரைன், செஷல்ஸ் ஆகிய நாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் தமிழ்நாடு அழைத்து வரப்பட்டனர்.

By

Published : Jun 28, 2020, 2:10 PM IST

tamil-people-rescued-from-various-countries-on-vandhe-bharat-scheme
tamil-people-rescued-from-various-countries-on-vandhe-bharat-scheme

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல தளர்வுகளுடன் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளின் அடிப்படையில் கடந்த மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்ட போதிலும், சர்வதேச விமான சேவைக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.

இதனால் உலகின் பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசு ’வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக குவைத், பக்ரைன், செஷல்ஸ் ஆகிய நாடுகளில் சிக்கிதவித்த 487 தமிழர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில், குவைத்திலிருந்து 158 பேர் குவைத் ஏா்லைன்ஸ் சிறப்பு தனி விமானம் மூலமும், பக்ரைனிலிருந்து 172 பேரும், செஷல்சிலிருந்து 157 பேரும் ஏா்இந்தியா சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

குவைத்திலிருந்து சென்னை திரும்பிய ஆந்திராவைச் சேர்ந்த 43 பேரும், புதுச்சேரியை சேர்ந்த எட்டு பேரும் சிறப்புப் பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை திரும்பிய அனைவருக்கும் சுங்கப் பரிசோதனைகள், கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு சிலர் அரசு கரோனா மையங்களுக்கும், சிலர் தனியார் விடுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களை மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :ஊரடங்கு மீறல் : 16 கோடியை நெருங்கும் அபராதம்!

ABOUT THE AUTHOR

...view details