தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 24, 2022, 5:10 PM IST

ETV Bharat / state

உக்ரைனிலிருந்து தமிழ்நாடு மாணவர்கள் உதவி கேட்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உக்ரைனில் தாங்கள் இருப்பதாக இதுவரை தமிழ்நாடு மாணவர்கள் யாரும் உதவி கேட்கவில்லை, இருப்பினும் தொடர்ந்து கவனித்து வருகிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக கட்டுப்பாட்டில் ரூ.1.11 கோடி செலவில் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்ட இணை இயக்குநர் பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 18 ஆண்டுகள், இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 11 ஆண்டுகள் எங்கேயும் போலியோ கண்டறியப்படவில்லை.

இதற்கு கடந்த 27ஆண்டுகள் போலியோ மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதே காரணம். பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது குழந்தைகள் வரை 57 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு 43 ஆயிரத்து 51 இடங்களில் வரும் 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றன.

கோர்பேவாக்ஸ் தடுப்பூசி

இதனை தேனாம்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்தப் பணிக்காக 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 12 - 15 வயதுக்குட்பட்டோருக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

இதற்காக ஒன்றிய அரசு 21 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 3 லட்சத்து 89 ஆயிரம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. எப்போது தடுப்பூசி செலுத்தலாம் என ஒன்றிய அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தவுடன் தடுப்பூசிப் போடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். 15 வயதுக்கு மேற்பட்ட 33 லட்சத்து 46 ஆயிரம் மாணவர்களில் 82.27 விழுக்காடு பேர் முதல் தவணை, 37.64 விழுக்காடு பேர் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

கரோனா மெகா தடுப்பூசி

ஒட்டுமொத்தமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 91.39 விழுக்காடு ஆக உயர்ந்துள்ளது. போலியோ சொட்டு மருத்து முகாம்கள் நடைபெற உள்ளதால், கரோனா மெகா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் அடுத்த வாரம் நடைபெறும். இருப்பினும் வழக்கமாக 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் 2,534 இடங்களில் மாற்றம் இருக்காது.

சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகளில் ஒன்றான செங்கல்பட்டு, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 புதிய மாவட்டங்களில் 1.11 கோடி ரூபாய் செலவில் மாவட்ட இணை இயக்குநர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும். இன்று அதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் உதவி கேட்கவில்லை

உக்ரைனில் தாங்கள் இருப்பதாக இதுவரை தமிழ்நாடு மாணவர்கள் யாரும் உதவி கேட்கவில்லை. கரோனா பரவலின்போது வூகானில் இருந்து உதவி கேட்டனர். ஆனால், இப்போது உக்ரைனிலிருந்து இதுவரை யாரும் உதவி கேட்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சாதிய ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாக தொடர்ந்து ஒரு குழுவினர் புகார் அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக துறைச்செயலர், தொழிலாளர் நலத்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தோடு முழுமையாக கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர் சேர்க்கை

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகளைத் தொடங்க முதலமைச்சர் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறார். இருப்பினும் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அளவு மாணவர்களுக்கு ராமநாதபுரம் கல்லூரியில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரஷ்யாவின் 5 விமானங்கள், 1 ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது; உக்ரைன்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details