சென்னையில் சைபர் கிரைம் தடுப்பு மற்றும் குற்றங்களை குறைப்பதற்கான ஹேக்கத்தான் போட்டி காவல் துறை, ஐ.ஐ.டியுடன் இணைந்து காவல்துறைத் தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட 148 பேர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு பின்னர் போட்டி நடத்தப்பட்டது. இதில், சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு ஊக்கபரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதன்பின், காவல்துறைத் தலைமை இயக்குநர் திரிப்பாதி கூறுகையில், தமிழ்நாடு அரசு சைபர் தடவவியல் மற்றும் சைபர் பாதுகாப்புக்காக 3கோடியே 70 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
சைபர் குற்றங்களை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் முன்னெடுத்து வருவதாகவும், தமிழ்நாடு காவல்துறையினர், ஐ.ஐ.டி, தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் இணைந்து சைபர் அரங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. அதன்மூலம் தொழிற்நுட்ப வல்லுநர்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை அளிக்க உள்ளனர். சைபர் குற்றங்களை தடுப்பதற்காக மாவட்டத்திற்கு ஒரு சைபர் குற்ற காவல் நிலையம் அமைக்கப்படும் என அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏடிஜிபி கந்தசாமி பேசுகையில், சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து சைபர் குற்றங்களை தடுக்க சைபர் அரங்கம் செயல்படுவதாகவும், சைபர் குற்றங்களை காவல் துறையால் மட்டும் தடுக்க முடியாது, ஐடி வல்லுநர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.