சென்னைகிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துமனையில், 2023 - 2024ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''டோராடூனில் நடைபெற்ற சுகாதாரத்துறை அமைச்சர்களுடனான கூட்டத்தில் நேற்றும் பங்கேற்றோம். இரண்டு நாள்கள் நடைபெற்ற பல்வேறு தலைப்புகளில் கூட்டம் நடைபெற்றது. எல்லா அமர்வுகளிலும் தமிழ்நாட்டின் மருத்துவ குறியீடு என்பது சிறப்பாக அமைந்திருக்கிறது என பாராட்டப்பட்டது.
மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களின் சேர்க்கை, காசநோய் வாகன மூலம் பரிசோதனை செய்யும் பணி, தொற்று நோய், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் 48 பல்வேறு திட்டங்கள் குறித்து மிகச் சிறப்பான பாராட்டுகளை பெற்றிருக்கிறோம். மேலும், ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தமிழ்நாட்டின் சார்பில் 14 கோரிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதில், மருத்துவக் கல்வி சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்விற்கு (நீட்) எதிர்ப்பு, கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் தென்காசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் நிறுவு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு ஆட்சேபனை, சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவப் பட்டதாரி படிப்புகளுக்கான உத்தேச பொது கலந்தாய்வுக்கு ஆட்சேபனை, தேசிய மருத்துவ ஆணையத்தின் (மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை நிறுவுதல், மதிப்பீடு மற்றும் மருத்துவக் கல்விக்கான இடங்களில் அதிகரிப்பு, 2023) வரைவுக்கு ஆட்சேபனை பொது மக்களின் கருத்துக்காக சமீபத்தில் வெளியிடப்பட்டது. காலியாக உள்ள அனைத்து இந்திய எம்.பி.பி.எஸ் இடங்கள் மாநிலத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும், நெக்ஸ்ட் தேர்வு இருக்கவே கூடாது போன்றவை குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரிடத்தில் மனு அளிக்கப்பட்டது. அப்போது ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர், ‘நீட் தேர்வுக்கு எங்களால் என்ன செய்ய முடியும்... உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறதே’ என்று சொன்னார். தமிழ்நாடு அரசின் சார்பில் சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றி, நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, குடியரத் தலைவர் கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் இதே போன்று நீட் தேர்விற்கு எதிரான மசோதாவை அனுப்பி, குடியரசுத் தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, உள்துறை அமைச்சகம் அதை நிராகரித்த விஷயத்தையும் கடந்த காலங்களில் சொல்லப்படாமலேயே போனது. ஆனால் அந்த நிலை இப்போது இல்லை.
குடியரசுத் தலைவருக்கு இந்த மசோதா சென்றவுடன் குடியரசுத் தலைவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, உள்துறை அமைச்சகம் மேல்நடவடிக்கையாகத் தொடர்ந்து, பலமுறை மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், உயர் கல்வி துறைக்கும், ஆயுஷ் நிர்வாகத்திற்கும் பல விளக்கங்கள் கேட்டு பல முறை கடிதங்களை எழுதினர். அதன் தொடர்ச்சியாக நாங்களும் சட்ட வல்லுநர்களுடான கலந்தாலோசனைக்குப் பிறகு, அதற்கான தெளிவான பதிலை சம்பந்தப்பட்ட உள்துறை அமைச்சகத்திற்குத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறோம். அவைகள் உயிரோட்டத்தில் இருக்கிறது என்பதை ஒன்றிய அமைச்சரிடத்தில் சொன்னோம்.