தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம்.. 3 மாதத்தில் விலை மாற்றம் - தமிழக அரசின் நடவடிக்கை என்ன? - சென்னை உயர்நீதிமன்றம்

Auto fare conversion: தமிழகத்தில் 12 வாரத்திற்குள் பயணிகள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

3 மாதங்களுக்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தகவல்!
3 மாதங்களுக்குள் ஆட்டோ கட்டணம்மாற்றியமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 7:31 AM IST

சென்னை:பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கும்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் பொதுநல மனு தொடர்ந்தார்.

அதில், "ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.முத்துகுமார், "போக்குவரத்து துறை இணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டணத்தை மாற்றியமைக்கும் குழுவில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர், நுகர்வோர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாக" தெரிவித்தார்.

இதையும் படிங்க:இனி தமிழகத்தின் 8 நகரங்களில் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ - தமிழக அரசு அறிவிப்பு!

"ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார். மற்ற மாநிலங்களில் ஆட்டோ கட்டண விகிதத்தையும் கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், "அதற்கான பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தற்போது அந்த பரிந்துரைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் அதிகபட்சமாக 12 வாரத்திற்குள் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும்" என்று உறுதி அளித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்திற்குட்பட்டு நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:மாவட்ட கல்வி அதிகாரிக்கு சிறை தண்டனை.. உயர் நீதிமன்றக்கிளை உத்தரவிட்டதன் காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details