சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (செப்.17) காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்க இயலாத காரணமாக, எழுத்துப்பூர்வமான உரையை சமர்ப்பித்தார்.
அவர் எழுதிய குறிப்பில், "ஜிஎஸ்டி செலுத்துவோர், குறிப்பாக சிறு வணிகர்கள், ஜிஎஸ்டி என் போர்ட்டலில் அனைத்து தகவல்களும் ஆங்கிலத்தில் இருப்பதால், கணக்கு தாக்கல் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தனர். தமிழ்நாடு வர்த்தகத்துக்கு உகந்த மாநிலமாக இருப்பதால், அவர்களுக்கு தேவையான வசதியை செய்து தரவேண்டிய கடமை இருக்கிறது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 4 ஆண்டுகளில், தமிழில் இந்த சேவைவை வழங்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. சட்டப்பேரவையில் எங்கள் அரசாங்கம், ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை தமிழில் தருவதாக உறுதி அளித்துள்ளது. எனவே, ஜிஎஸ்டி போர்ட்டலில், தமிழில் சேவை வழங்குவதை விரைவாக மேற்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி செலவு மற்றும் பயன்களை மாநிலத்தின் கண்ணோட்டத்தில் மறு ஆய்வு செய்ய இதுவே உகந்த நேரமாகும்.
மறைமுக வரி விதிப்பு
மேலும், நேரடி, மறைமுக வரி விதிப்பை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்கும் வகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் அடிப்படை மாற்றம் செய்வதற்கான நேரமும் வந்துவிட்டது. எங்கள் பங்காக, தமிழ்நாடு அரசு பொருளாதார நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், அறிஞர்கள் அடங்கிய குழுவை அமைக்கும் முயற்சியில் உள்ளோம். இதன்மூலம், ஒன்றிய, மாநில அரசுகளுக்கான நிதி அதிகார பகிர்வை மேம்படுத்த முடியும்.