தமிழ்நாடு

tamil nadu

புயலை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் - அமைச்சர் செந்தில் பாலாஜி!

By

Published : Dec 9, 2022, 10:57 PM IST

சூறாவளி கனமழையால் மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய 200 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பிரச்சினை ஏற்படும் மாவட்டங்களுக்கு உடனடியாக குழு அனுப்பப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சென்னை :அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்வது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மாண்டஸ் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து 12 மண்டலங்களின் தலைமை பொறியாளர்கள், 44 மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார்.

புயல் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து சீரான மின் விநியோகம் வழங்குவது தொடர்பாகக் கூட்டத்தில் ஆலோசித்ததாகத் தெரிவித்தார். மொத்தம் உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களிலும், 176 செயல் பொறியாளர்களின் தலைமையில் தனித்தனியாகக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஏறத்தாழ 11 ஆயிரம் பேர் களப்பணியில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் 200 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு, மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டால் சிறப்புக்குழுவைக் கொண்டு சீர் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மொத்தம் 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், 12 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் தூர மின் கம்பிகள் மற்றும் 15 ஆயிரம் மின்மாற்றிகள் கையிருப்பில் இருப்பதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னையை பொருத்தவரை சிறப்பு பணிகளைச் செய்வதற்காக ஆயிரத்து 100 பேர் பணியில் இருப்பதாகவும், மின் விநியோகத்தில் எந்த வித பாதிப்புகளும் இல்லை என்றார். சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் புயல் கரையை கடக்கும் பொழுது தேவைப்பட்டால் மின்சார துண்டிப்பு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மேலும் அவசர அழைப்பிற்காக 24 மணி நேரமும் மின் வாரியத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், சென்னையில் மழை நீர் தேங்கும் இடங்களில் உள்ள பில்லர் பாக்ஸ்கள் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதையும் படிங்க:பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவும் பணி: அமைச்சர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details