சென்னை: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் சிக்கிய திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் திமுகவிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த நிலையில், விருத்தாசலம் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று(ஏப்.12) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவி வீட்டிற்கு சென்ற பின் தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சிறுமி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், அப்பள்ளியின் தாளாளரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருமான பக்கிரிசாமி என்பவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுத்திட நான் உத்தரவிட்டுள்ளேன். குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி விருத்தாசலம் நகர் மன்றத்தின் 30-வது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனே அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ரத்து செய்யப்பட்டு கட்சியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.