சென்னை:தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில், சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 767 சதுர அடி பரப்பளவில் தரை, ஆறு தளங்களுடன் 39 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இன்று (செப். 19) காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
மேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின்கீழ் கோவை மாவட்டம் - கோமங்கலம்புதூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் - பெரியசெவலை, தேனி மாவட்டம் - பெரியகுளம், திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு, விழுப்புரம் மாவட்டம் பனமலைப்பேட்டை ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஐந்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலா ஒன்பது கோடியே 70 லட்சத்து ஏழாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்களையும் அவர் திறந்துவைத்தார்.