தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2023, 6:06 PM IST

Updated : Jun 24, 2023, 6:20 PM IST

ETV Bharat / state

"தேவையில்லாமல் குண்டாஸ் வேண்டாம்" - டிஜிபிக்கு கடிதம் எழுதிய அரசு தலைமை வழக்கறிஞர்

காவல் துறை அதிகாரிகள் சில நெறிமுறைகளின் அடிப்படையில் குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்துள்ளார்.

Anti Hooliganism Act
குண்டர் தடுப்பு சட்டம்

சென்னை:தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது, ''முக்கியமாக “பொது ஒழுங்கு” மற்றும் “சட்டம் மற்றும் ஒழுங்கு” குறித்த வேறுபாடுகளை விரிவாக எடுத்துரைத்து, “பொது ஒழுங்கு” முற்றிலும் பாதிக்கப்படும் கடுமையான வழக்குகளில் மட்டுமே குண்டர் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர்கள் தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது காவல் துறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று, குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது சமீப காலமாக, மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கும் குண்டர் சட்டத் தடுப்பு காவல் ஆணைகள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். மேலும் தடுப்பு காவல் ஆணைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் குற்றவாளிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கவும் நீதிமன்றங்கள் ஆணையிடுகின்றன.

இதைத் தவிர்க்க, மாவட்ட ஆட்சியர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தை விதிவிலக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார். அவ்வாறு தவறாகப் பயன்படுத்தினால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 மற்றும் 22ன் கீழ் வழங்கப்பட்டுள்ள தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் செயலாக அமையும் எனவும் கடிதத்தில் எடுத்துரைத்துள்ளார். மேலும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்க பரிந்துரைக்கப்படும் குற்றங்கள் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள கடுமையான குற்றங்களாக இருக்க வேண்டும் என்றார்.

குற்றவாளிகள் ஈடுபடும் குற்றச்செயல்கள் பொது ஒழுங்கை முற்றிலும் மீறுவதாக இருக்க வேண்டும் எனவும், இக்குற்றச்செயல்களால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களோ? அல்லது ஒட்டு மொத்த சமூகமோ? பாதிப்புக்குள்ளாகும் வகையில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் பொது ஒழுங்கு மீறப்பட்டுள்ளதா? என்பதை கவனத்தில் கொண்டே குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும்; தேவை இல்லாமல் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்தார்.

மேலும், சாதாரணச் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையில் சம்பந்தப்படும் குற்றவாளிகளைக் கையாள இந்திய தண்டனைச் சட்டத்தில் போதுமான வழிமுறைகள் உள்ளன என்பதை காவல் துறையினர் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் உட்படுத்த பரிந்துரைக்கும் முன் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய விரிவான வழிமுறைகள் குறித்து அறிக்கை ஒன்றை அனுப்புமாறு காவல் துறை தலைமை இயக்குநரை கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கும் தடுப்புக் காவல் ஆணைகள் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படாமல் உறுதி செய்வதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிவாரணத் தொகை வழங்குவதும் தடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Thiruppur Fire Accident: 50 கடைகள் நாசம் - மொத்தமும் போச்சு என கதறும் வியாபாரிகள்

Last Updated : Jun 24, 2023, 6:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details