தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஹில் ரமாணி ராஜினாமா எதிரொலி - வழக்குகள் தேக்கம்!

சென்னை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், இன்று அவரது அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் மீது விசாரணை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Sep 9, 2019, 11:59 AM IST

tahil-ramani

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் குழு கூடி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதேபோன்று மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அஜய் குமார் மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்யவும் மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் குழுவிற்கும் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் தன்னை மூன்று நீதிபதிகளே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழு செப்டம்பர் 3ஆம் தேதி நிராகரித்த நிலையில், இந்தியாவின் பழமைவாய்ந்த தற்போது 75 நீதிபதிகளுக்கு மேல் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்துவிட்டதாகவும் இதன்பிறகு மூன்று நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாறுதல் செய்வது உகந்ததாக இருக்காது என்பதால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாகவும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

கொலிஜியம் குழு பரிந்துரை செய்த கடிதத்தின் நகல்

இந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி, நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு 75 வழக்குகளை விசாரிப்பதற்கான பட்டியலை பதிவுத் துறை வெளியிட்டிருந்தது. தற்போது திடீர் திருப்பமாக, தலைமை நீதிபதி தஹில் ரமாணி பணிக்கு வராத நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் மீது விசாரணை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தலைமை நீதிபதியின் திடீர் பணியிடமாறுதலை கண்டிக்கும் வகையில் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details