தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 10, 2021, 4:37 PM IST

ETV Bharat / state

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகள் 4 பேரிடம் விசாரணை

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகள் 4 பேரை சென்னை கொண்டு வந்து டெல்லி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 பேரிடம் விசாரணை
4 பேரிடம் விசாரணை

சென்னை: மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவியான அதிதி சிங் அளித்த புகாரின் பேரில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த 5-ஆம் தேதி லீனா மரியா பாலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தனது கணவரான ஷிவிந்தர் மோகன் சிங்கை சிறையிலிருந்து ஜாமீனில் எடுக்க உதவுவதாகவும், அதற்காக ரூ. 200 கோடி தன்னிடம் பெற்றதாகவும் சுகேஷ் சந்திரசேகர் மீது அதிதி சிங் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்து கொண்டே தனது காதலியான லீனா மரியா பால் மூலம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் லீனா மரியா பால் மற்றும் சுகேஷின் உதவியாளர்களான கமலேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து, மோகன்ராஜ் ஆகியோரையும் டெல்லி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகள் 4 பேரை சென்னை கொண்டு வந்து டெல்லி காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அருண் முத்து, கமலேஷ் கோத்தாரி, சாமுவேல், மோகன்ராஜ் ஆகியோரிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி மூலம் சம்பாதித்த பணத்தையும் கார்களையும் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் வைத்து 4 பேரிடமும் டெல்லி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுகேஷ் சந்திரசேகர் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் தூண்டுதலின் பேரில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஸ்டாலினுக்கு இடையூறு செய்யவே புதிய ஆளுநர்... சும்மா இருக்க மாட்டோம் - பொங்கும் அழகிரி

ABOUT THE AUTHOR

...view details