தமிழ்நாடு

tamil nadu

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத அதிமுக முன்னாள் நிர்வாகி!

By

Published : Dec 21, 2019, 6:24 AM IST

சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்த வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆஜராகாததால் வழக்கு விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுபஸ்ரீ
சுபஸ்ரீ

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ(23) தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி பணியை முடித்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது, பள்ளிக்கரணை - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட பேனர் விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ரவிக்குமார் 308, 279, 304 ஆகிய இந்திய சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன், லாரி ஓட்டுநர் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர் நீதிமன்றம்

தற்போது இந்த வழக்கில் பரங்கிமலை போக்குவரத்து காவல் துறையினர் 155 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து அதில் 18 பேரை சாட்சிகளாகச் சேர்த்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், குற்றப்பத்திரிகை நகலை பெற ஜெயகோபால் உள்பட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்த வழக்கு ஆலந்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸ்டார்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து வருகிற 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொள்வதற்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details