டிக்-டாக் செயலியில் ஆபாச காட்சிகள், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்படுவதாக கிளம்பிய சர்ச்சையின் காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டிக்-டாக் சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் டிக்டாக் மீதான தடை நீக்கப்பட்டது. டிக்-டாக் பயன்படுத்துபவர்கள் அதிக ஃபாலோவர்ஸ் பெறுவதற்காக ஆபாசமாக நடிப்பது, விலங்குளை கொலை செய்வது, துன்புறுத்துவது, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது உள்ளிட்ட காணொலிகளைப் பதிவிடுகின்றனர்.
அந்த செயலியை சிலர் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினாலும், பெரும்பாலும் ஆபாசம் நிறைந்த காட்சிகள், இரட்டை அர்த்தங்கள் கொண்ட காணொலிகள்தான் பகிரப்பட்டு வைரலாகிறது. அதனால் தவறான பாதைக்கு எளிதில் பயனர்கள் தள்ளப்பட்டுவிடுகின்றனர். அந்த வகையில், டிக்டாக்கை பயன்படுத்தி இரட்டை அர்த்த காணொலி வெளியிட்டு வருகிறார் சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம்.
அவர் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து டிக்டாக்கில் பெண்களுடன் டூயட் பாடுவது, ஆடுவதுபோன்ற ஆயிரக்கணக்கான காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அவை அனைத்தும் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்டதாக உள்ளன. அதுமட்டுமல்லாமல் கரோனா ஊரடங்கில் காவல்துறையினர் அனைவரும் பாதுகாப்பு பணியில் அயாரது உழைத்துவரும் இந்த நேரத்திலும் தினமும் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பதிவேற்றம் செய்து வருகிறார். அவ்வளவு ஏன் இன்று காலை கூட 5க்கும் மேற்பட்ட காணொலிகளை வெளியிட்டுள்ளார்.