தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை - ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தகவல்

மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வு தேவையில்லை என உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

By

Published : Feb 9, 2022, 8:58 PM IST

Updated : Feb 9, 2022, 9:36 PM IST

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்

சென்னை: நீட் தேர்வு மாணவர்களுக்கு எத்தகைய பங்கை ஆற்றுகிறது என்பது குறித்தும், நீட் தேர்வு தற்போதுள்ள நிலைக்குத் தேவையா என்பது குறித்தும் விளக்குகிறார், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன்.

நீட் தேர்வு குறித்து அவர் கூறியதாவது, “சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவிலுள்ள சிறிய கிராமத்தில் சமூக நீதிக்காகப் போராடிய குடும்பத்தில் இருந்து, அரசுப் பள்ளியில் படித்து, உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்தேன்.

அதனால், எனக்கு சமூக நீதி குறித்தும், கிராமப்புற மாணவர்களின் நிலை குறித்தும் நன்றாகத் தெரியும். கடந்த ஆட்சியில் எனது தலைமையிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டது.

மருத்துவப் படிப்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, அரசுப்பள்ளி மாணவர்கள் வாய்ப்புகள் அற்ற சூழ்நிலையில் இருப்பதைக் கண்டறிந்தோம். தமிழ்நாடு மாணவர்களுக்கு மருத்துவப்படிப்புகளில் உரிய வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே, தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு மேம்படும் என்பதை எங்களுடைய ஆய்வில் தெரிவித்திருந்தோம்.

நீட் தேர்வால் பாதிப்படைவது அரசுப்பள்ளி மாணவர்கள் தான்:

நீட் என்பது மெரிட் அடிப்படையில் ஆனது என்ற கருத்தை ஏற்க முடியாது. 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை 3 மணி நேர நீட்தேர்வு கேள்விக்குறியாக்குகிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்த மாணவர்கள், முழுக்க முழுக்க நீட் தேர்வுக்குரிய பயிற்சிப்படிப்பு என்று முழுக் கவனத்தோடு செயல்படக்கூடிய நிலையில், ஏழை கிராமப்புற மாணவர்கள் பொருளாதார ரீதியாக குடும்பச்சூழல் உள்ளதால், முழுவதும் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த இயலாத நிலையை உணர்ந்தோம்.

நீட் தேர்வு வருவதற்கு முன்னர், அரசுப் பள்ளி மாணவர்கள் 38 பேர் மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர். ஆனால், நீட் தேர்வு 2017ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பின்னர் 6 பேர் மட்டுமே மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர்.

நீட் தேர்விற்கு வசதி படைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி சேர்ந்துகொள்கின்றனர். அதே நேரத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத முடியாத நிலையால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நீட் தேர்வு இந்தியா முழுவதற்கும் தேவையில்லை.

தமிழ்நாட்டில் அரசின் செலவில் அதிகளவில் மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு லட்சக்கணக்கில் அரசு செலவிடுகிறது. எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படித்தால் தான், தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக இருக்கும்.

உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் ஐஐடியில் படிக்கும் வெளிநாடு வாழ் மாணவர்களுக்கான கட்டணத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பில், அவர்கள் வெளிநாட்டில் தான் பணியாற்றச்செல்வர். எனவே, ஏன் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தியாவில் நீட் தேர்வு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மருத்துவக்கவுன்சில் மூலம் நடத்தப்படுகிறது.

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்

எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட சட்டப்பேரவையின் மூலம் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றால் போதுமானது.

தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல, இந்தியாவிற்கே நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்தாகும்.

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்

சில மருத்துவக் கல்லூரிகள் நுழைவுத் தேர்வு நடத்தினால் அதற்காக தயாராகும் மாணவர்களை பற்றிய கவலை தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பெண்களுக்கெதிரான குற்றங்கள் பற்றி மத்திய அமைச்சர்கள் அதிர்ச்சி பதில் - சு. வெங்கடேசன்

Last Updated : Feb 9, 2022, 9:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details