குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அச்சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது, டெல்லி காவலர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களிலும் அச்சட்டத்திற்கு எதிராக மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் இயக்கங்கள் போராடி வருகின்றன.
திருச்சி: ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நேற்று காலை கல்லூரியில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் பகுதி வரை பேரணி சென்றனர். பின்னர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூய வளனார் கல்லூரி மாணவிகள் இச்சட்டத்திருத்தம், குடிமக்கள் பதிவேடு குளறுபடிகளைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் நடத்தினர். மேலும், இத்திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலக்கரை பகுதியில் வணிகர்கள் தங்களது வர்த்தக நிறுவனங்களை மூடி கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை: குடியுரிமை திருத்தச்சட்டம் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக இருக்கிறது என்று கூறி காவிரி சமவெளி பாதுகாப்பு கூட்டமைப்பினர் தஞ்சாவூர் தொடர் வண்டி நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏரளாமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.