சென்னை:நாமக்கல்லில் பள்ளி மாணவர் தற்கொலை தொடர்பான வழக்கை முடித்து காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், நாமக்கல் நீதிமன்ற உத்தரவின் படி வழக்கை தொடர்ந்து நடத்த காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.
நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவர் மோகன் ராஜ், கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி பள்ளி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், சக மாணவர்கள் தகாத முறையில் பேசியதாலும், தாளாளர் மற்ற மாணவர்கள் முன் அடித்ததாலும், மோகன் ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நாமக்கல் சிபிசிஐடி போலீசார், விசாரணைக்கு பின், தற்கொலை எனக் கூறி, வழக்கை முடித்து வைக்க, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை நிராகரித்த நாமக்கல் நீதிமன்றம், வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு தாளாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது.