தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 18, 2021, 4:54 PM IST

Updated : Aug 18, 2021, 7:56 PM IST

ETV Bharat / state

உதிரும் சிமென்ட் பூச்சு, இடிந்து விழும் நிலையில் கதவு... அச்சத்தில் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்புவாசிகள்!

சென்னை: 'புதிய வீடு, புதிய வாழ்க்கை' என்ற குடிசை மாற்று வாரியத்தின் வாசகத்தை நம்பி புதிதாகக் கட்டப்பட்டுள்ள புளியந்தோப்பு அடுக்குமாடிக் கட்டடத்தில் மக்கள் குடியேறினர். ஆனால் கதவு, ஜன்னல்கள் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சத்தில் தற்போது வீடுகளுக்கு வெளியே உறங்கி வருகின்றனர்.

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகள்
குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகள்

சென்னையில் புதிதாகக் கட்டப்படவுள்ள, கட்டப்பட்டு வரும் எட்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று (ஆக.17) பார்வையிட்டார்.

இந்த குடிசை மாற்று குடியிருப்புகள், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளைப் போல தரமான கட்டடங்களாக அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், 22 ஆயிரம் குடும்பங்கள் கண்டறியப்பட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்களுக்கான வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் முன்னதாக உறுதியளித்தார்.

தரமற்ற கட்டடங்கள், இடிந்து விழும் நிலையில் கதவு ஜன்னல்கள்

இந்நிலையில், சென்னை, புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் கட்டடம் தரமற்றும், சிமென்ட் பூச்சுகள் தொட்டால் உதிரும் நிலையிலும், கதவு, ஜன்னல்கள் எந்நேரமும் இடிந்து விழும் நிலையிலும் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இடிந்து விழும் நிலையில் கதவு ஜன்னல்கள்

சென்னை, புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் இருந்த குடிசை வீடுகளை அப்புறப்படுத்தி அப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் இந்த அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு கட்டுமானப் பணிகள் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் பொதுமக்களுக்கு முறையாக வீடுகள் கொடுக்கப்படவில்லை.

வீடுகளில் குடியேற 1.50 லட்சம் பண வசூல்?

கடந்த 2018ஆம் ஆண்டு 864 புதிய வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தக் கட்டடங்களில் கரோனா பரவல் அதிகமாக இருந்த காலத்தில் கரோனா சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஆனால், டோக்கன் ஒதுக்கப்பட்டவர்களிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என குடிசை மாற்று வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தரமற்ற கட்டடம்

இதில் 112.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக 864 வீடுகள் கட்டப்பட்டன. இரண்டாம் கட்டமாக 139.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,056 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று முடிந்தன.

குடியேறியவர்களுக்கு அதிர்ச்சி

இந்நிலையில் டோக்கன் வழங்கப்பட்டவர்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் வீடுகள் வழங்கப்படாததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் மக்கள் தாமாகவே குடியேறினர். 'புதிய வீடு, புதிய வாழ்க்கை' என்ற வாரியத்தின் வாசகத்தை நம்பி புதிய வீட்டிற்குச் சென்ற அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

வீட்டிற்குள் சிமென்ட் பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்தன. விரல்களால் அழுத்தினால் சிமென்ட் கையோடு பெயர்ந்து விழுந்துள்ளது. கதவு, சட்டங்கள், ஜன்னல்கள் ஓரம் வெடித்து எந்நேரத்திலும் விழும் நிலையில் தற்போது உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் வீட்டிற்கு வெளியே உறங்கி வருகின்றனர்.

தரமற்ற கட்டடம்

மேலும் அத்தியாவசியத் தேவையான குடிநீர் மற்றும் இதரத் தேவைகள் குறித்து கேட்கும்போது பயனாளர் பயனீட்டுத் தொகையான ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்துமாறு மீண்டும் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.

எழும்பூர் எம்எல்ஏ ஆய்வு

இந்நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்பின் தற்போதைய நிலையறிந்த எழும்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன், குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் ஆகியோர் முன்னதாக கட்டடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சுவர் பெயர்ந்து சேதமடைந்த இடங்களில் புனரமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர்.

மேலும் கட்டடத்தின் நிலை குறித்து சட்டப்பேரவை உறுப்பினரிடம் பொதுமக்கள் முறையிட்டபோது, 'நாங்கள் தற்போது தான் பணிக்கு வந்துள்ளோம். கட்டடம் கட்டும்போது நாங்கள் ஆட்சியில் இல்லை. மேலும் கட்டடங்களில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்போம்' எனவும் வாக்குறுதி அளித்துவிட்டுச் சென்றார்.

பொதுமக்கள் கோரிக்கை

கட்டடத்தின் நிலையையும், தரத்தையும் உறுதி செய்வதோடு தங்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீர் வசதி போன்றவற்றை முறையாக ஏற்படுத்தித் தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு குடியிருப்போர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் அடுக்குமாடிக் குடியிருப்பு சேதமடைந்து பொதுமக்கள் பலர் குடியேறத் தயங்குவதால், இங்கு அதிகளவில் சமூக விரோத செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி

முன்னதாக கட்டடத்தை ஆய்வு செய்ய ஐஐடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதியளித்த நிலையில், விரைவில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையுடன் அப்பகுதி மக்கள் காத்துள்ளனர்.

இதையும் படிங்க:முக்கிய வழக்குகளை தமிழ்நாட்டுக்கு வெளியே மாற்ற அடுத்தடுத்த கோரிக்கைகள்... காரணம் என்ன?

Last Updated : Aug 18, 2021, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details