தமிழ்நாடு

tamil nadu

நெகிழி இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை - பொன்னையன்

By

Published : Oct 17, 2020, 6:28 AM IST

ரூ.218.67 கோடி நிதியின் மூலம் 1599.36 மெட்ரிக் டன் எடைகொண்ட நெகிழி கழிவுகளைப் பயன்படுத்தி 1599.36 கி.மீ தொலைவு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என பொன்னையன் தெரிவித்துள்ளார்.

ponnaiyan
ponnaiyan

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-2018இல், திருத்தம் செய்யப்பட்டது குறித்த மதிப்பீட்டாய்வுக் கூட்டம் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் (முன்னர் மாநிலத் திட்டக் குழு) துணைத் தலைவர் சி.பொன்னையன் தலைமையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு அரங்கில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர் அலுவலர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் தொடக்க உரையாற்றிய சி. பொன்னையன், தமிழ்நாட்டினை நெகிழி மாசில்லா மாநிலமாக உருவாக்கிடவும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய நெகிழிகளை ஒழிக்கவும் சுற்றுச்சூழல் அமைப்புகள் (Eco-Clubs), தேசிய பசுமைப்படை மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டங்கள் மற்றும் பெருந்திரள் விழிப்புணர்வு பேரணிகள் மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நெகிழி, மனித உயிரை மட்டும் இல்லாமல் இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரையும் அழித்துவிடும் ஒரு கொடிய மனித கண்டுபிடிப்பு எனவும், மக்களால் பயன்படுத்தி எறியப்படும் இந்நெகிழியானது, கடல் நீருக்குள் சென்று கடலில் வாழும் பல உயிரினங்களின் உயிரை பறித்துவிடுவதாகவும் தெரிவித்தார்.

2011-12 முதல் 2014-15 வரை தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.218.67 கோடி நிதியின் மூலம் 1599.36 மெட்ரிக் டன் எடைக்கொண்ட நெகிழி கழிவுகளைப் பயன்படுத்தி 1599.36 கி.மீ தொலைவு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று பொன்னையன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 80 நாள்களில் நெகிழியை ஒழித்துக் கட்டிய நீல கிராமம்!

ABOUT THE AUTHOR

...view details