தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்திரப் பதிவு திருத்தச்சட்டத்திற்கு தடைகோரி வழக்கு; தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு - மாவட்ட பதிவாளர்

மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கி கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்திர பதிவு திருத்தச் சட்டத்திற்கு தடை கோரி வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தவு
பத்திர பதிவு திருத்தச் சட்டத்திற்கு தடை கோரி வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தவு

By

Published : Oct 6, 2022, 10:33 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச்சட்டத்தில் தமிழ்நாடு அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், போலிப்பதிவுகள் குறித்து மாவட்ட பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும்.

பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை தானாக முன்வந்தோ? புகார் மீதோ? எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் தொடர்ச்சியான ஆவணங்கள் இருந்தால் அவற்றின் தரப்பினருக்கும், பதிவு ரத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கும், இந்த பத்திரப்பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும்.

அதற்காக பதில் பெறப்பட்டால், அதைக் கருத்தில்கொண்டு ஆவணப்பதிவை பதிவாளர் ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்துசெய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆரோக்கியதாஸ் என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், மத்திய சட்டத்திற்கு முரணாக இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், புதிய சட்டத்திருத்தம் மத்திய சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பத்திரப்பதிவு ரத்து தொடர்பாக எந்த ஒரு காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. இது ஒரு முரண்பாடான சட்டத் திருத்தம் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். மோசடி பத்திரம் தான் என்பதை முடிவு செய்ய எந்த விதமான விதிமுறைகள், நடைமுறைகள் வகுக்கப்படவில்லை.

இந்திய சாட்சியங்கள் சட்டத்தின் கீழ் உரிய சாட்சியங்கள் வேண்டும் இதற்கு சரியான அமைப்பு உரிமையியல் நீதிமன்றங்கள் தான் எனக்குறிப்பிட்டுள்ளார். இதுபோல பத்திரப்பதிவு ரத்துகளை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் செய்ய முடியும் என்றும், மாவட்ட பதிவாளர்களுக்கே அதிகப்படியான அதிகாரம் இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும், சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், என்.மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு குறித்து நான்கு வாரத்திற்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசு 6 காவல் துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details