முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், பழைய மாமல்லபுரம் சாலையில் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை 2015ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதன்மூலம் பெற்ற 7.73 கோடி ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாக கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமானவரித் துறை 2018 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு முதலில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல்செய்த மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக கடந்த 21ஆம் தேதி (ஜன 21) நேரில் முன்னிலையாக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த வழக்கை, சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்கவும் கோரியிருந்தனர்.