தமிழ்நாடு அரசின் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அண்மையில் திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பதிலறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “கரோனா தடுப்புப் பணியில் உலகமே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், 15ஆவது நிதிக்குழுவிடம் இருந்து தமிழ்நாடு அரசு என்ன பெற்றுள்ளது என்பது குறித்து தேவையில்லாத சர்ச்சையை எதிர்க்கட்சி தலைவர் கிளறி உள்ளார். பிப்ரவரி 14 அன்று நான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், 2020-2021ஆம் ஆண்டில் 15ஆவது நிதிக் குழுவின் முதல் அறிக்கையினால் தமிழ்நாட்டிற்கு என்ன சாதகங்கள் மற்றும் என்ன பாதகங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து தெளிவாகவும், விளக்கமாகவும் குறிப்பிட்டிருந்தேன்.
அதில் மத்திய வரிகளில் மாநில அரசுகளுக்கான நிதிப்பகிர்வை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகக் குறைக்குமாறு நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயிலிருந்து இனி பங்கு அளிக்கப்படாது என்பதைக் கருத்தில் கொண்டால், மொத்த நிதிப்பகிர்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைப்பினால், மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயில் பெரும் பாதிப்பு இருக்காது. மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 4.023 சதவீதத்திலிருந்து 4.189 சதவீதமாக, சிறிய அளவே உயர்ந்துள்ளது. கடந்த சில நிதிக்குழுக்களின் பரிந்துரைகளால் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து குறைந்து வந்த போக்கு, இந்த உயர்வினால் மாற்றம் அடைந்துள்ளது. ஆனாலும், கடந்தகால அநீதிகளுக்கு, அதிலும் குறிப்பாக பதினான்காவது நிதிக்குழு இழைத்த பாதிப்புகளுக்கு இது முழுமையான பரிகாரமாகாது. எனவே, தமிழ்நாடு போன்ற சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலத்திற்கு சரியான கணக்கீடுகள் மூலம், போதிய நிதிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை நாம் பதினைந்தாவது நிதிக்குழுவின் முன்பு தொடர்ந்து மீண்டும் வலியுறுத்துவோம்.
இதிலிருந்தே, தமிழ்நாட்டிற்கு வரிவருவாயில் சிறிதளவில் கூடுதல் பங்கு அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி அது முன்பு இருந்த நிலையில் ஒரு நல்ல முன்னேற்றம் என்பதையும், அதே நேரத்தில் இந்த கூடுதல் பங்கு முன்பு ஏற்பட்ட அநீதிகளை முழுமையாக களையவில்லை என்பதையும் தொடர்ந்து அரசு நிதிக் குழுவின் முன் தன் குரலை எழுப்பும் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். இந்த நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. நான் நிதிநிலை அறிக்கையில் கூறியதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டு, நான் அந்த நேரத்தில் மத்திய அரசை விமர்சித்ததாகவும், தற்போது நிலை மாறிவிட்டேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்வது முற்றிலும் தவறான ஒரு கூற்று ஆகும்.
தமிழ்நாட்டிற்கு முதன்முறையாக வருவாய் பற்றாக்குறை மானியம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறேன். தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட பதினைந்தாவது நிதிக்குழு, தமிழ்நாட்டிற்கு வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக 4,025 கோடி ரூபாய் வழங்க பரிந்துரை செய்துள்ளது. எனினும், மத்திய அரசின் ‘நடவடிக்கை அறிக்கையில்’, நிதிப்பகிர்விற்குப் பின்னரான வருவாய்ப் பற்றாக்குறை மானியம் வழங்குவது தொடர்பான நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதற்கென மொத்தமாக, 74,340 கோடி ரூபாய்யை நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில், மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் இம்மானியத்திற்காக 30,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.