சென்னை: கரோனா பரவல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டதால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள், பண்டிகைகள் குறித்து, மதத் தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வரும் ஜூலைவரை ஸ்ரீரங்கம் கோயிலில் நடக்க உள்ள விழாக்கள், பண்டிகைகள் எப்படி நடத்துவது என்பது குறித்து, மதத் தலைவர்களுடன் கலந்து பேசி, அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கரோனா காரணமாக மதத் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறவில்லை என இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் தெரிவித்திருப்பதாகவும், கோயில் உற்சவம் நடத்த முடியாது என கூறுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்து அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் கண்டனம்
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பின்பற்ற தவறிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலைய துறை ஆணையர் பிரபாகர் நேரில் ஆஜராகியிருந்தார்.