சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதி 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.
இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா, உச்சபுளியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் செந்தில்குமார், மண்டபத்தைச் சேர்ந்த சாம் ஆகிய நான்கு பேர் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது, அவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கைக் கடற்படையின் இரண்டு படகுகள் சீறிப் பாய்ந்து வந்து, இவர்களது படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில், படகு மூழ்கத் தொடங்கியது. அந்தப் படகில் இருந்த மீனவர்கள் வாக்கி டாக்கியில் எழுப்பிய அலறல் குரல், மற்ற படகில் இருந்த மீனவர்களுக்குக் கேட்டதாக கூறப்படுகிறது.
நேற்று (ஜன. 19) காலையிலேயே கரை திரும்ப வேண்டியவர்கள், இதுவரை கரைக்கு வந்து சேரவில்லை. எனவே, மீனவர்களைத் தேடி மூன்று விசைப்படகுகளில் 12 மீனவர்கள் சென்றுள்ளனர். ஆனால் இதுவரை மீணவர்கள் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், மீனவர்களை தாங்கள் சிறைபிடிக்கவில்லை என இலங்கை கடற்படையினரும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.