2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் பெண் பல் மருத்துவர் ஒருவர் பயணித்த இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியது. அதில் பலத்த காயமடைந்த மருத்துவரின் உடலில் 90 விழுக்காடு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த மோட்டார் வாகன தீர்ப்பாயம், 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாய் இழப்பீட்டாக நிர்ணயித்தது.
குறைவான தொகை நிர்ணயிக்கப்பட்டதாக மருத்துவர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்தனர். அதில், பூரண நலமுடன் இருந்திருந்தால், அவரது வருமானம் உயர்ந்திருக்கும் என்ற அடிப்படையில், இழப்பீட்டை 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548ஆக உயர்த்தி நிர்ணயித்துள்ளனர். அந்த தொகையை 2013ஆம் ஆண்டிலிருந்து 7 சதவீத வட்டியுடன், 12 வாரத்தில் விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்.
விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதுதான் காரணம். வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2009 மற்றும் 2019ஆம் ஆண்டுகளின் புள்ளி விவரங்களை ஒப்பிடும்போது, இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை விபத்துகளில் சிக்கி மரணம் அடைவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.