தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூங்கும் தூய்மை இந்தியா திட்டம் - கழிப்பறை கட்டுவதில் ஊழல் - கட்டி முடிக்காத கழிப்பறை

சென்னை: திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமமாக மாற்றுவதற்கு கழிப்பறை கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை கிராம நிர்வாக அலுவலர்கள் கையாடல் செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெடுங்குன்றம் ஊராட்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

chennai
chennai

By

Published : Oct 26, 2020, 9:58 PM IST

Updated : Oct 26, 2020, 10:10 PM IST

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவற்றுடன் அடிப்படைத் தேவைகள் முடிந்துவிடுவது இல்லை. தனிமனித ஒழுக்கத்தை கற்பிக்கும் சுத்தமும் சுகாதாரமும் நாட்டின் பண்பாட்டை கட்டமைக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவதில்லை, சுகாதாரம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல, அது ஒரு கலாசாரம். மாற்று சக்தியாக செயல்பட வேண்டிய தூய்மை இந்தியா திட்டம் தூங்கிக் கொண்டிருக்கிறது.

அந்தவகையில் சென்னை அருகே கழிப்பறை கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை கிராம நிர்வாக அலுவலர்கள் கையாடல் செய்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், சதானந்தபுரம், கொளப்பாக்கம், புத்தூர் மப்பேடு ஆகிய ஐந்து ஊர்கள் உள்ளன. இங்கு சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்டபில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இலவச கழிப்பறை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தி வருகின்றன. அதன்படி ஒரு வீட்டிற்கு கழிப்பறை கட்டுவதற்கு மத்திய அரசு 7ஆயிரத்து 200 ரூபாயும், மாநில அரசு 4 ஆயிரத்து 800 ரூபாயும், மொத்தம் 12 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் இந்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு குடியிருப்பு சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, போன்ற நகல்களை வைத்து பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

2018 -19ஆம் ஆண்டு சதானந்தபுரம் எம்ஜிஆர் தெருவில் உள்ள 200 வீடுகளில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் ஒரு சில வீடுகளுக்கு பேஸ்மென்ட் போட்டு ஹாலோ பிளாக் கல் மட்டுமே எழுப்பியுள்ளனர். அதற்கு மேற்கூரையோ, உள்ளே கழிப்பறை சாதனங்களோ எதுவும் இல்லாமல் கழிப்பறையை கட்டி முடித்தது போன்ற புகைப்படத்தை அலுவலர்கள் எடுத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பலமுறை அப்பகுதி மக்கள் நெடுங்குன்றம் ஊராட்சி செயல் அலுவலர் ஏழுமலையிடம் முறையிட்டும் உரிய பதில் கிடைப்பதில்லை. இந்நிலையில், சதானந்தபுரம் பகுதி இளைஞர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சேகரித்த தகவலை செங்கல்பட்டு ஆட்சியரிடம் மனுவாக புகார் அளித்தனர்.

அந்த மனுவில், கழிப்பறை திட்டத்தில் எத்தனை பேர் பயனாளிகள், தொகை எத்தனை பேருக்கு கிடைத்துள்ளது, பயனடைந்தோர் எத்தனை பேர் போன்ற அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளனர். அதேபோன்று சென்னை அருகே உள்ள நெடுங்குன்றம் முதல் நிலை ஊராட்சி பகுதியிலும் பல லட்சம் ஊழல் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மனுவை முறையாக விசாரணை செய்தால் பல லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கிராம நிர்வாக அலுவலர்கள் சிக்குவார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கழிப்பறைகளை கட்டித்தர வேண்டுமென பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் இம்மக்களின் கோரிக்கையை ஏற்று விசாரணை நடத்தப்பட வேண்டும், கழிப்பறையின்றி தவிக்கும் பெண்களுக்கு ஒரு நல்ல முடிவை பெற்றுத்தர வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:தேர்ந்த விளையாட்டு வீரரைப் போல் கைப்பந்து விளையாடும் நாய் ’சீசர்’ - வைரல் காணொலி!

Last Updated : Oct 26, 2020, 10:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details