தமிழ்நாடு

tamil nadu

சுற்றுலா செல்ல ரூ.1.25 கோடி செலவு செய்த எஸ்.பி.வேலுமணி : லஞ்ச ஒழிப்புத்துறை

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு சுற்றுப் பயணத்திற்காக மட்டும் ரூ.1.25 கோடி பணம் செலவு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Mar 15, 2022, 12:26 PM IST

Published : Mar 15, 2022, 12:26 PM IST

Updated : Mar 15, 2022, 12:38 PM IST

லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை:அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவர் தான் பதவியில் இருந்த காலகட்டத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த ஆகஸ்டு மாதம் எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 60 இடங்களில் சோதனை நடத்தி ரூ.13 லட்சம் பணம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கு

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி, அவரது மூத்த சகோதரர் அன்பரசன், அன்பரசனின் மனைவி ஹேமலதா, எஸ்.பி.வேலுமணியின் தொழில் பங்குதாரர்களான சந்திர சேகர், சந்திர பிரகாஷ், கிருஷ்ணவேணி, சுந்தரி உள்ளிட்ட 13 பேர் மீது மற்றொரு சொத்து குவிப்பு வழக்கை கோவை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த 2016-2021 ஆண்டு காலகட்டத்தில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக தனது பெயரிலும், குடும்பத்தார் பெயரிலும் ரூ.58.23 கோடி சொத்து குவித்துள்ளார். அதாவது தனது வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

58 இடங்களில் சோதனை

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (மார்ச் 15) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோவையில் 41 இடங்கள், சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள், திருப்பத்தூரில் 2 இடங்கள், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 1 இடம் மற்றும் கேரளா மாநிலத்தில் 1 இடம் என மொத்தம் 58 இடங்களில் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை

குறிப்பாக கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவரது சகோதரர், பங்குதாரர்கள் நிறுவனங்களான மகா கணபதி ஜுவல்லர்ஸ், செந்தில் & கோ, Constromall goods pvt ltd, Constronics India, Vardhan Infraa structure, Alam Gold & Diamonds ஆகிய நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வருமானத்தை மறைத்துக் காட்டி மோசடி

குறிப்பாக எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினரை பினாமிகளாக வைத்து தான் பதவியில் இருந்த காலகட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு டெண்டர்களை பெற்றுக் கொடுத்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து லோன் பெற்று அதைத் திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதேபோல தனது உறவினர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் வருமானத்தை மறைத்துக் காட்டியும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.1.25 கோடி சுற்றுலாவுக்கு செலவு

மேலும் எஸ்.பி.வேலுமணி அவரது குடும்பத்தினருடன் ரூ.1.25 கோடி பணத்தை ஹாங்காங், மலேசியா உள்ளிட்ட வெளிநாடு சுற்றுலாப் பயணத்திற்காக செலவழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

Last Updated : Mar 15, 2022, 12:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details