தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெல்மெட் அணியாத காவலர்களிடம் முறையாக Fine வசூலிக்கப்படுகிறதா? - அதிர்ச்சித்தகவல்

தலைக்கவசம் அணியாமல் சென்ற புகாருக்கு உள்ளான காவலர்களிடம் முறையாக அபராதம் வசூலிக்கப்படுகிறதா? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கேட்டதில் இரு வெவ்வேறு பதில்கள் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Dec 8, 2022, 10:51 PM IST

சட்டத்தில் குலறுபடி செய்யும் போலீஸ்: காவல் தலைமை விளக்கம் அளிக்குமா
சட்டத்தில் குலறுபடி செய்யும் போலீஸ்: காவல் தலைமை விளக்கம் அளிக்குமா

சென்னை: குற்றத்தை தட்டிக்கேட்கும் இடத்தில் உள்ள காவல்துறையினர் முறையாக சட்டத்தை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக பல சமூக ஆர்வலர்கள் மூலம் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் காவலர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் ஒருவரிடம் காவலர் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர்களிடம் முறையாக அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி விவரங்களை கேட்டிருந்தார்.

குறிப்பாக 2019ஆம் ஆண்டு தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர்கள் எத்தனை பேர்? அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு? என்பது குறித்து பதில்கோரி பதிவு செய்திருந்தார்.

இவரது ஆர்.டி.ஐ விண்ணப்பத்தை ஏற்று பதிலளித்துள்ள போக்குவரத்து திட்டப்பிரிவு துணை ஆணையர் ஹர்ஷ் சிங், கடந்த 2019ஆம் ஆண்டு தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர்களின் மொத்த எண்ணிக்கை 29. அதில் 18 பேரிடம் மொத்தம் 1800 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 11 காவலர்களிடம் இன்னும் அபராதம் வசூல் செய்யப்படவில்லை எனவும் பதிலளித்துள்ளார்.

ஆர்டிஐ-யில் வெவ்வேறு தகவல்கள்

இதற்கு முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டும் சமூக ஆர்வலர் காசிமாயன் இதே கேள்விகளை முன்வைத்து ஆர்.டி.ஐ மனு ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அப்போது அந்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், அப்போது போக்குவரத்து திட்டத்துறை கூடுதல் துணை ஆணையராக இருந்த திருவேங்கடம் அளித்த பதில் மனுவில், 2019ஆம் ஆண்டு தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர்களின் மொத்த எண்ணிக்கை 65 பேர் எனவும், அதில் 41 பேரிடம் அபராதமாக 4100 ரூபாய் வசூலிக்கப்பட்டு, 24 காவலர்களிடம் இன்னும் அபராதத் தொகை வசூலிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமூக ஆர்வலர் காசிமாயன் இருவேறு காலகட்டத்தில் ஆர்.டி.ஐ மூலம் பதிவு செய்த ஒரே கேள்விக்கு பொதுத்தகவல் அலுவலர்கள் இருவர் மூலம் வெவ்வேறு பதில்கள் தகவல்களாக கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதன் மூலம் தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர்களிடம் முறையாக அபராதத் தொகையை வசூலிக்காமல் முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது. 2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆர்.டி.ஐ மனுவிற்கான பதிலில் 65ஆக இருந்த காவலர்களின் எண்ணிக்கை தற்போது 29ஆக குறைந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆர்டிஐ-யில் வெவ்வேறு தகவல்கள்

அதுமட்டுமல்லாமல் விடுபட்ட 36 காவலர்கள் யார்? யார்? யாரை காப்பாற்ற இந்த முறைகேடுகள் அரங்கேற்றப்படுகிறது போன்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது. தலைக்கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களை விரட்டி விரட்டி அபராதம் வசூலிக்கும் காவல்துறையினர், காவலர்கள் என்று வரும் போது முறைகேடு செய்வது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விடையறியா இக்கேள்விகளுக்கு தெளிவான பதிலளிக்கும் வகையில் காவல்துறை தலைமை விளக்கம் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்குச் செல்லத் தடை

ABOUT THE AUTHOR

...view details