தமிழ்நாடு

tamil nadu

சென்னை விமானநிலையத்தில் முதன்முறையாக அமைக்கப்படும் 'ஸ்கைலைட் சிஸ்டம்' - அதன் சிறப்பம்சங்கள் தெரியுமா?

சென்னை விமானநிலையத்தில் கட்டப்பட்டு வரும் அதிநவீன ஒருங்கிணைந்த விமானநிலைய முனையங்களில்,அதிநவீன ஸ்கைலைட் சிஸ்டம் அமைக்கப்படுவதால் வெப்பம் இல்லாமல் இயற்கையான சூரிய ஒளி, காற்று வசதிகள் கூடுதலாகப் பயணிகளுக்கு கிடைக்கும். சென்னை விமானநிலையத்தில் முதன்முறையாக இந்த சிஸ்டம் அமைக்கப்படுகிறது.

By

Published : May 24, 2022, 6:05 PM IST

Published : May 24, 2022, 6:05 PM IST

சென்னை விமானநிலையத்தில் முதன் முறையாக அமைக்கப்படும் ஸ்கைலைட் சிஸ்டம்
சென்னை விமானநிலையத்தில் முதன் முறையாக அமைக்கப்படும் ஸ்கைலைட் சிஸ்டம்

சென்னைவிமான நிலையத்தில் 2,500 கோடி ரூபாய் செலவில்,உள்நாடு மற்றும் சா்வதேச முனையங்களை இணைத்து ஒருங்கிணைந்த அதிநவீன, புதிய விமான முனையங்கள் கட்டும் பணி, 2018 செப்டம்பரில் தொடங்கியது. 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படும் இந்த புதிய முனையங்கள் பணி கடந்த 2021ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு, தொடா்ச்சியாக ஊரடங்கு, நிலங்கள் கையகப்படுத்துவதில் தாமதம், கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சென்னை விமானநிலையத்தில் ஓர் ஆண்டில் கையாளப்படும் பயணியர்களின் எண்ணிக்கை தற்போது 1.7 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் 3.5 கோடியாக அதிகரிக்கும். அதற்கு ஏற்றார்போல் இந்த புதிய முனையம் கூடுதல் வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றது.

தரை தளத்தில் சர்வதேச பயணிகளுக்கான, வழக்கமான நடைமுறைகளும், இரண்டாவது தளத்தில், பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அதிநவீன முனையத்தில் மொத்தம் 5 தளங்கள் உள்ளன. பயணிகள் ஓய்வு அறைகள், விவிஐபிகள் தங்கும் அறைகள், ஷாப்பிங் மால்கள் உட்பட பல்வேறு கூடுதல் வசதிகள் இந்த புதிய முனையத்தில் அமைகின்றன.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க, தனது ’செல்போன் செயலி’ மூலம் அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள விமான நிலைய ஆணையம் ’செல்போன் செயலி திட்டம்’ தொடங்க உள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் அதிநவீன முனையம் முடிக்கப்பட்டு திறக்கும் தருவாயில் ’செல்போன் செயலி’ பயன்பாட்டிற்கு வரும் என சென்னை விமானநிலைய ஆணைய அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.

முதன்முதலாக ’ஸ்லைலைட் சிஸ்டம்’: இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் முதன்முதலாக, ‘ஸ்கைலைட் சிஸ்டம்’ எனும், முனையத்திற்குள் அதிகளவு சூரிய ஒளி வெளிச்சம் வருவதற்கான, பிரத்யேக வடிவமைப்புகள் அமைக்கப்படுகின்றன.

இதுகுறித்து சென்னை விமான நிலைய உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த முனையத்தில் 'ஸ்கைலைட் சிஸ்டம்' எனும் முனையத்திற்கு அதிக சூரிய ஒளி வெளிச்சம் வருவதற்காக 6 மீட்டர் வட்ட வடிவில், 10-க்கும் மேற்பட்ட 'ஸ்கைலைட் சிஸ்டம்' அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சூரிய வெளிச்சம் நேரடியாக விமானநிலையத்தின் உள்பகுதிக்கு வருவது போல் அமைக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் சூரிய வெளிச்சம் மட்டுமே உள்ளே வரும். வெப்பத்துடன் கூடிய புற ஊதாக் கதிர்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் திறனும் இதில் உள்ளது. அந்த சிஸ்டத்திற்கு மேலும், கீழுமாக 2 பகுதிகளிலும் சிறப்பு கண்ணாடிகள் அமைக்கப்படுகின்றன. அவைகள் சூரிய ஒளியை பில்டா் செய்து வெளிச்சத்தை மட்டும் உள்ளே அனுப்பும். வெப்பத்தை தடுத்து நிறுத்தும். அவ்வாறு அமைக்கப்பட்டு வரும் ஸ்கைலைட் சிஸ்டம் பணிகள் பெரும்பாலானவை முடியும் தருவாயில் உள்ளன.

சென்னை விமானநிலையத்தில் முதன் முறையாக அமைக்கப்படும் ஸ்கைலைட் சிஸ்டம்

இதனால் இந்த புதிய அதிநவீன முனையங்கள் நல்ல வெளிச்சத்துடன், காற்றோட்ட வசதியாகவும் இருக்கும். அதே நேரத்தில் மின்சார செலவும் கணிசமான அளவு குறைய வாய்ப்பு உள்ளது என விமான நிலைய அலுவலர் தெரிவித்தார். மேலும் இந்த புதிய அதிநவீன ஒருங்கிணைந்த விமான முனையங்களின் பணிகளில், சுமாா் 80 விழுக்காடு முடிக்கப்பட்டு, வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2023 தொடக்கத்தில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று சென்னை விமானநிலைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனா்.

இதையும் படிங்க:கொடைக்கானலில் தொடங்கியது மலர் கண்காட்சி

ABOUT THE AUTHOR

...view details