தமிழ்நாடு

tamil nadu

முயற்சிக்கு முதிர்ச்சியில்லை; தற்காப்புக் கலைகளில் தேர்ந்த முதியவர்!

By

Published : Sep 21, 2020, 9:25 AM IST

Updated : Sep 26, 2020, 7:41 AM IST

எம்ஜிஆர், புரூஸ் லீ போன்ற நடிகர்களைப் பார்த்து தற்காப்புக் கலைகள் மீது ஆர்வம் கொண்டு வயது முதிர்ந்த காலத்தில் முயற்சி தளராமல் பல கலைகளைக் கற்று வருகிறார், கோயில் அர்ச்சகர் சேஷாத்ரி.

முயற்சிக்கு முதிர்ச்சியில்லை
முயற்சிக்கு முதிர்ச்சியில்லை

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோயிலில் அர்ச்சகராக இருப்பவர், சேஷாத்ரி. 1990-லிருந்து அங்கு பணியாற்றி வரும் இவருக்கு வயது தற்போது 59. இவர் தற்காப்புக் கலைகளான கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட கலைகளைப் பயின்று தற்போதும் பயிற்சி எடுத்துள்ளார். குறிப்பாக, கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி உள்ளார். மேலும் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள வயது தடை இல்லை எனச் சொல்கிறார், அறுபது வயதை நெருங்கும் சேஷாத்ரி.

சேஷாத்ரிக்கு சிறுவயது முதலே சிலம்பம், கராத்தே உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் இருந்துள்ளது. இதற்கு அவருடைய தந்தை ஒத்துக் கொள்ளாத காரணத்தினால், மறைமுகமாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். சிறுவயதில் இருக்கும்போது எம்ஜிஆர் படங்களைப் பார்த்து சிலம்பம் கற்றுக் கொள்ள சேஷாத்திரிக்கு விருப்பம் ஏற்பட்டுள்ளது. பின்னர், சிலம்பம் கற்றுக்கொள்ள அடிக்கடி தன்னுடைய பணிகளிலிருந்து விடுப்பு எடுத்து கற்றுக்கொண்ட நமது சேஷாத்ரி, புரூஸ் லீ படத்தைப் பார்த்து கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை பிறந்ததாகப் பூரிக்கிறார்.

புரூஸ் லீ போல மாறிய தாத்தா

இதைப்பற்றி பலமுறை தனது வீட்டில் சொன்ன போது, சண்டை போன்ற கலைகளை கற்றுக்கொள்ள வேண்டாம் என்று சேஷாத்திரியின் பெற்றோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். பின்னாளில் தனக்குத் திருமணம் நடந்த பிறகு, விடாமுயற்சியாக சிலம்பம், கராத்தே ஆகியவற்றை கற்றுக் கொண்டுள்ளார். தொடர்ச்சியாக, ஏழு ஆண்டுகள் கராத்தே கற்றுக் கொண்டு, கராத்தேவில் உள்ள நான்காம் நிலை பிளாக் பெல்ட்டை வாங்கியுள்ளார். இதைப்பற்றி செய்திகள் பத்திரிகையில் வந்ததைத் தொடர்ந்து, அதனைக் கண்ட அவரது தந்தை பாராட்டியுள்ளார். அன்றிலிருந்து கலைகளை வீட்டில் பயின்று வந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சேஷாத்திரி, 'வாள்வீச்சு, சிலம்பம் உள்ளிட்டவற்றில் உள்ள பல நுணுக்கங்களை அறுபது வயதை நெருங்கும் நான் கற்க உள்ளேன். அதேபோன்று கராத்தேவில் உள்ள நுணுக்கங்களையும் கற்கவுள்ளேன். தற்போது கரோனா காலம் முடிந்தபின் முழுமையாகப் பயிற்சியில் ஈடுபட உள்ளேன்.

முயற்சிக்கு முதிர்ச்சியில்லை

மேலும் கலைகளை கற்க வயது ஒன்றும் தடையில்லை, கலைகளை கற்பதனால் உடலும் உள்ளமும் உறுதியாக உள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் திருமணங்கள் நடந்த பின்பும், நம் வாழ்க்கையில் நாம் கற்கவேண்டிய கலைகள் எது வேண்டுமானாலும் நமது முயற்சியின் பேரில் கற்றுக்கொள்ள முடியும்' என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார், சேஷாத்ரி.

கராத்தேவில் பிளாக் பெல்ட்

இந்த அறுபது வயதை நெருங்கும் சேஷாத்திரி, தற்போது உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் முன்மாதிரியாகவும், அவர் வயது கொண்ட அனைவருக்கும் முன் உதாரணமாகவும் திகழ்கிறார். எந்த வயதிலும் எல்லாக் கலைகளையும் கற்றுக் கொள்ள முடியும் என்னும் நம்பிக்கையை தரும் விதமாக இவரின் திறமையை காணமுடிகிறது. முயற்சிக்கு முதிர்ச்சியில்லை என்பதற்கு இந்த முதியவரே உதாரணம்.

இதையும் படிங்க: திருகல் நோயால் பாதிக்கப்படும் வெங்காயப்பயிர்கள் - மாற்று விவசாயத்தை நாடும் அவலத்தில் விவசாயிகள்!

Last Updated : Sep 26, 2020, 7:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details