தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 22, 2020, 11:35 PM IST

ETV Bharat / state

தொழில் விரோதத்தால் ஒருவர் கொலை : 6 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள்!

தூத்துக்குடி : தொழில் விரோதத்தால் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

silverpuram_murder_case_accused_arrest in Thoothukudi
silverpuram_murder_case_accused_arrest in Thoothukudi

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சில்வர்புரத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 42). இவர் அப்பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சில்வர்புரத்தில் உள்ள காப்பகம் அருகே இன்று (செப்.22) காலை நந்தகுமார் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இது குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், நந்தகுமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நந்தகுமாருடன் பணிபுரிந்து வந்து வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஜார்ஜ் (வயது 45) அவரது நண்பருடன் இணைந்து இக்கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

சில்வர்புரத்தைச் சேர்ந்த ஜார்ஜ், நந்தகுமார் வேலை செய்த அதே பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், ஜார்ஜை கடந்த சில மாதங்களுக்கு முன் பணியில் இருந்து திடீரென நிர்வாகத்தினர் நீக்கியுள்ளனர். தொடர்ந்து, தான் வேலை இழந்ததற்கு நந்தகுமார் தான் காரணம் என ஜார்ஜ் விரோதம் கொண்டுள்ளார். எனவே அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஜார்ஜ், தனது உறவினரான விளாத்திக்குளம் வேடநத்தத்தைச் சேர்ந்த இளையராஜாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, நந்தகுமாரை கொலை செய்வதற்காக வாளினை தயார்செய்து தருமாறு இளையராஜாவிடம், ஜார்ஜ் கேட்டுள்ளார். இதற்காக 15 ஆயிரம் ரூபாயை அவர் வழங்கியதாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் இன்று அதிகாலை நந்தகுமார் பணிமுடிந்து திரும்புகையில் ஜார்ஜ் அவரைக் குத்தி, கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரிய வந்தது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள், கொலை நடைபெற்ற இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். மேலும், கொலை நடைபெற்ற இடம் அருகே குடியிருப்புகள் அதிகம் இருப்பதால் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமரா காட்சியைக் கைப்பற்றியும் காவலர்கள் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, சிப்காட் பகுதியில் பதுங்கியிருந்த ஜார்ஜை பிற்பகல் ஒரு மணியளவில் தனிப்படை காவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது உறவினர் இளையராஜா, விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தில் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இந்த வழக்கில் இறந்த நந்தகுமாரும் குற்றவாளி ஜார்ஜும் ஒரே கம்பெனியில் பர்னிச்சர்களுக்கு பாலிஷ் போடும் தொழில் செய்து வந்துள்ளனர். சில காரணங்களுக்காக ஜார்ஜ் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

வேலையை விட்டு நீக்கப்பட்டதற்கு நந்தகுமார் தான் காரணம் என நினைத்த ஜார்ஜ், அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டி, தனது உறவினர் இளையராஜாவுடன் சேர்ந்து இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளார். குற்றவாளிகளைக் கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன்படி கொலை சம்பவம் நடைபெற்ற ஆறு மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.

இதையும் படிங்க:மின் தடை... ஆக்ஸிஜன் பற்றாக்குறை - திருப்பூரில் மூவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details