சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பாக கே.எஸ்.தென்னரசுவும், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகாவும், தேமுதிக சார்பாக ஆனந்த்தும் என நான்கு முனைப்போட்டி நிலவியது.
திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., திருமாவளவன் எம்.பி., அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோரும் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அங்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை திமுகவின் 21 மாதம் ஆட்சியின் மதிப்பீடாகவும், அதிமுகவிற்கு தலைமையை நிரூபிக்க வேண்டிய தேர்தலாகவும் இரண்டு தரப்பும் வெற்றி பெறும் முனைப்புடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் தெளிவுடன் செயல்பட்ட திமுக, அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது முதல் அதிவேகம் எடுக்க ஆரம்பித்தது.
இதில், திமுகவினர் வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு, டம்ளர், குக்கர் போன்ற பரிசுப் பொருட்களும், சாமியானா பந்தல் அமைத்து வாக்காளர்களை காலை முதல் மாலை வரை அடைத்து வைத்து, பண விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுகவினரும் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஈரோடு கிழக்கில் அனுமதியின்றி செயல்பட்டதாக 14 சாமியானா பந்தல்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூலம் மூடப்பட்டது.
மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ரத்து செய்யும் அளவிற்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. திமுக தனது 21 மாதங்கள் ஆட்சியில் செய்த செயல்பாடுகளையும், அதிமுக தங்கள் ஆட்சியில் செய்த செயல்பாடுகள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் பிரசாரத்தில் முன்வைத்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 பூத்துகள் உள்ளன. இதில் மொத்தமாக 75 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.