சென்னைமதுரவாயலை சேர்ந்தவர் நைனா முகமது என்ற அரணவ். இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செல்லம்மா’ என்ற தொடரில் நடித்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவரும் தனியார் தொலைக்காட்சியில் ‘செவ்வந்தி’ என்னும் தொடரில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், திவ்யா இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.
இதனையடுத்து நடப்பாண்டு ஜூன் மாதம் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் சென்னை வடக்கு மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திவ்யா கருவுற்றுள்ளார். இந்த நிலையில் திவ்யா, கணவர் அரணவ் தன்னை தாக்கியதாக கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரச்னை உருவாகியது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திவ்யாவின் கணவர் அரணவ், ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த மனுவில், “எனது மனைவி திவ்யா, அவரது நண்பர் ஈஸ்வர் என்பவருடன் இணைந்து மூன்று மாத கருவை கலைக்க நாடகம் நடத்துகிறார். எனவே இது சம்பந்தமாக மனைவி திவ்யா, அவரது நண்பர் ஈஸ்வர் மற்றும் இதற்கு துணை போன மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.