சென்னை: தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முழுவதுமாக தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை ராஜாஜி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், ”போதைப் பொருள் பிரச்சனை என்பது இளைஞர்கள், அடுத்த தலைமுறை சார்ந்த பிரச்சனை. தமிழ்நாட்டில் ஏழே முக்கால் கோடி பேரில் 50 லட்சம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். பிற மாநிலங்களில் இல்லாத போதைப் பொருட்கள் எல்லாம் இங்கு விற்பனையாகிறது.
போதைப் பழக்கத்தால் தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவராவது பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவையே சுமக்க வேண்டிய தூண் போன்ற இளைஞர்கள், இந்தியாவிற்கு சுமையாகி விடுவார்களோ என அச்சமாக இருக்கிறது. இது முதல்கட்ட போராட்டம், அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் போராட்டம் தீவிரமடையும். கஞ்சா, அபின், கோக்கேன், ஹெராயின், எல்எஸ்டி போன்றவை பள்ளி கல்லூரி வாசலிலே விற்பனை நடைபெறுகிறது.
பேப்பர் வடிவில் போதைப் பொருள் விற்பனை நடக்கிறது. மாணவர்கள் நாவில் அதை வைத்துக் கொள்கின்றனர். பாட்டளி மக்கள் கட்சி தலைவராகி ஸ்டாலினை சந்தித்தபோது எனது முதல் கோரிக்கை போதைப் பொருட்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டில் 10 விழுக்காடு மாணவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு 9 விழுக்காடு இந்த ஆண்டு 1 விழுக்காடு அதிகரிப்பு. போதை பழக்கமுள்ள 27 விழுக்காடு மாணவர்கள் எளிதில் கிடைப்பதால் போதைக்கு அடிமையானதாக கூறியுள்ளனர். ஐஐடி, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், NIFT, மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போதைப் பொருட்கள் எளிதில் கிடைக்கிறது. போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
என்னிடம் அதிகாரமிருந்தால் 2 நாளில் போதைப் பொருளுக்கு முடிவு கட்டி விடுவேன். முதல் நாள் ஆணை, அடுத்தநாள் நடவடிக்கை எடுப்பேன். போதை விற்பனை நடைபெறும் பகுதியில் காவல் உதவி ஆய்வாளரை உடனடியாக பதவி நீக்கம் செய்வேன். தமிழகத்தில் ஒரு மாதத்தில் 80ஆயிரம் கிலோ கஞ்சா விற்பனையாவதாக காவல்துறை தரப்பிலிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. போதை பொருள் ஒழிப்பு பணியில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும், முற்றிலுமாக போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும்.
மாணவர்கள் இளைஞர்கள் மீது பாமக போல பிற கட்சிகளுக்கு அக்கறை இல்லை. தமிழக அரசு போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்களை கொண்டு எங்களது அடுத்த கட்ட போராட்டம் வெடிக்கும் என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, "இந்தியாவில் அதிக போதைப் பொருள் விற்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது. மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரிடம் இருமுறை வலியுறுத்தி உள்ளேன். காவல்துறைக்கு தெரியாமல் போதைப் பொருள்களை யாரும் விற்க முடியாது.
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டால் அவர்கள் வெளியில் வந்து மீண்டும் அவற்றை விற்கின்றனர். எனவே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். உடந்தையாக இருக்கும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கும் போதைப் பழக்கம் காரணமாக இருக்கிறது.
பல இடங்களில் காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்து மறைமுகமாக கஞ்சா விற்பனைக்கு அனுமதி பெறுகின்றனர். போதைப் பொருளை ஒழிப்பதில் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளுக்கும் பங்கு உண்டு. கலால் துறையின் பணி மது விற்பனையை அதிகரிப்பது தான் என செந்தில் பாலாஜி தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதுக்கடையை கூட மூடவில்லை. மது ஒழிப்பு தொடர்பாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இன்ஸ்டாகிராமில் கஞ்சா ஆர்டர் செய்து விற்பனை - பொறியியல் பட்டதாரி மூவர் கைது