தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடையில் கடத்திய குவிண்டால் அரிசி பறிமுதல்

நவம்பர் 21ஆம் முதல் 27ஆம் தேதி வரை கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ 11.7 லட்சம் மதிப்புள்ள 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

By

Published : Dec 1, 2022, 10:49 PM IST

ரேஷன் கடையில் கடத்திய 1809 குவிண்டால் அரிசி பறிமுதல்
ரேஷன் கடையில் கடத்திய 1809 குவிண்டால் அரிசி பறிமுதல்

சென்னை: அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் / சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்கிறது.

விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருவகின்றனர்.

அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980ன் படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன்படி, 21.11.2022 முதல் 27.11.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ, 11,73,395/- மதிப்புள்ள 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி கைப்பற்றப்பட்டது.

மேலும், மண்ணெண்ணெய் 87 லிட்டர், 72 எரிவாயு உருளை, துவரம் பருப்பு 3520 கிலோ ஆகியவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 47 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்ட 191 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் 2 நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980ன் படி கைது செய்யப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:58% வாக்காளர்களின் ஆதார் எண் இணைப்பு - தேர்தல் ஆணையம் தகவல்

ABOUT THE AUTHOR

...view details