தமிழ்நாடு

tamil nadu

மதங்களை இழிவுபடுத்தியதாக சீமான் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு!

By

Published : Aug 6, 2023, 9:27 AM IST

இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சாத்தானின் பிள்ளைகள் எனக் கூறி மதங்களை இழிவுபடுத்தியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்(seeman) மீது போலீசார் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

seeman has been booked cases under 4 sections
மதங்களை இழிவுபடுத்தியதாக எழுந்த புகாரில் சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சென்னை:மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 30ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய சீமான், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் எனக் குறிப்பிட்டார். சீமானின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

சீமானின் இந்தப் பேச்சுக்கு பேராசிரியர் அருணன், வசந்திதேவி, திரைப்பட நடிகை ரோஹிணி உள்படப் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட நட்புக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் (ஆகஸ்ட் 2) காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க:ஆசிரியர்கள் தங்களது சம்பளத்தில் 1% கொடுத்தால் அம்பேத்கரிய நூலகம் அமைக்க வாய்ப்பு கிட்டும் - திருமாவளன்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திராவிட நட்புக்கழகத் தலைவர் சிங்கராயர், "தமிழ்நாட்டில் அரசியல் சுயநல காரணங்களுக்காக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் சீமான் பேச்சு அமைந்துள்ளது. அத்துடன், பொதுமக்களிடையே ஒரு வித அச்சத்தையும், கலவர பயத்தையும் உண்டாக்கியுள்ளது'' எனக் கூறினார்.

மேலும், இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நுங்கம்பாக்கம் போலீசார் இருபிரிவினருடையே கலகம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஃபகத் ஃபாசில் வீடியோவை ஷேர் செய்தால் நடவடிக்கை? - ஃபகத்திற்கு கோரிக்கை வைத்த கிருஷ்ணசாமி!

ABOUT THE AUTHOR

...view details