தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 22, 2023, 5:10 PM IST

ETV Bharat / state

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 142 நெளிமுதுகு அறுவை சிகிச்சை: மகிழ்ச்சியுடன் வீடு திரும்பும் மக்கள்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 142 பேருக்கு நெளிமுதுகு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நெளிமுதுகுத்துறையில் தண்டுவடம் வளைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 142 பேருக்கு நெளிமுதுகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் நெளிமுதுகு (SCOLIOSIS) நோய் பற்றிய விழிப்புணர்வு மாதமாக மருத்துவ உலகில் கொண்டாடப்படுகிறது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது மிக அவசியம். மனிதனின் முதுகுத்தண்டு அசாதாரணமாக வளைந்து நெளிந்து காணப்படுவதே நெளிமுதுகு ( SCOLIOSIS) என்று அழைக்கப்படுகிறது.

இந்நோயானது குழந்தைகளையும் இளம் வயதினரையும் அதிக அளவில் பாதிக்கிறது. ஆண்களைக்காட்டிலும் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். நெளிமுதுகு நோய் ஏற்படுவதற்கு பல வகையான காரணங்கள் இருப்பினும், இது ஒருவகையான மரபணுக் கோளாறினால் ஏற்படும் பிறவிக் குறைபாடு என்று மருந்துவர்கள் கருதுகின்றனர்.நெளிமுதுகு நோயின் வெளிப்பாட்டால் மனிதனின் முதுகுத்தண்டு நேராக இல்லாமல் “S” அல்லது C வடிவில் வளைந்து காணப்படும்.

இதன் விளைவாக தோள்கள் மற்றும் இடுப்பு சமமாக இல்லாமல், ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். முதுகுத்தண்டின் ஒரு பகுதியில் சீரற்ற தசைமண்டலம் இருப்பதாலும், முதுகின் ஒரு புறத்தில் முகடு (HUMP) ஏற்படுவதாலும் உடல் தோற்ற உருக்குலைவு ஏற்படும். அதனால் குழந்தைகளும் இளம் வயதினரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மேலும் முதுகுத்தண்டு வளைவின் காரணமாக குழந்தைகள் நேராக நிமிர்ந்து நிற்க முடியாமல் சிரமப்படுவதுண்டு.

இந்நோயினால் தீவிரமாக தாக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டு மூச்சு விடவும் சிரமப்படுவார்கள். முதுகுத்தண்டு தெளிவு சிலருக்கு நரம்பு சார்ந்த குறைபாடுகளையும் உபாதைகளையும் ஏற்படுத்தக் கூடும்.

நெளி முதுகு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதுகுத்தண்டின் வளைவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் அபாயம் உள்ளது. சிறிய வளைவுகளைக் காட்டிலும் பெரிய வளைவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதனால் இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தகுந்த சிகிச்சை மேற்காெள்வது அவசியம்.

குழந்தைகளின் வளர்ச்சிப் பருவத்தில் ஏற்படும் ஆரம்ப நிலை நெளிமுதுகினால் ஏற்படும் சிறிய வளைவுகளை உடற்பயிற்சி மற்றும் பிரேசிங் (Bracing) சிகிச்சை முறையினால் முதுகுத்தண்டின் வளைவு மேற்கொண்டு அதிகரிக்காமல் கட்டுப்படுத்த முடியும். இந்நோய் முற்றிய நிலையில் காணப்படும் பெரிய வளைவுகளை அறுவை கிசிச்சையின் மூலம் சரி செய்யலாம். நெளிமுகுது அறுவை சிகிச்சையில் தேர்ச்சிபெற்ற முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களால் மட்டுமே நெளிமுதுகை சீர் செய்ய முடியும்.

முதுகுத்தண்டு வளைவு சரி செய்யப்பட்டபின் குழந்தைகளின் தோற்ற உருக்குலைவு சீரடைந்து, எழிலான தோற்றத்துடன் அவர்கள் நேராக நிமிர்ந்து நிற்க முடியும் மற்றும் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படுவதால், மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. சிகிச்சைக்குப் பிறகு, குழந்தைகள் அன்றாட வேலைகளில் சிரமமின்றி ஈடுபடலாம்.நெளிமுதுகைச் சீர்செய்யும் அறுவை சிகிச்சைகள் மிகவும் கடினமானவை.

இத்தகைய அறுவை சிகிச்சைகளைச் சீராகச் செய்து முடிப்பதற்கு, அனுபவம் மிக்க அறுவை சிகிச்சைக் குழுவும், மயக்கவியல் மருத்துவக் குழுவும் மிக அவசியம். நெளிமுதுகு நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ மையங்கள் நம்நாட்டில் வெகு குறைவு. அத்தகைய சிறப்பு மையங்களுள் ஒன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள எலும்பு முறிவு அறுவை சிகிச்சைத் துறையின் ஓர் அங்கமாக செயல்பட்டுவரும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைப் பிரிவு (Orthiopedic Spine Surgery Unit). இந்த மையம் 2008ஆம் ஆண்டிலிருந்து நெளிமுதுகு (SCOLIOSs) நோய்க்கான சிகிச்சை இந்த மையத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் தென் இந்திய மாநிலங்களிலிருந்தும், அந்தமானில் இருந்தும் கூட இம்மையத்திற்கு சிகிச்சைப் பெற வருகின்றனர். இம்மையத்தின் நெளிமுதுகுநோய் பதிவேட்டில் (SCOLIOSI5 REGISTRY) இதுவரை 293 நெளிமுதுகு நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

2013ஆம் ஆண்டிலிருந்து, கடந்த பத்து வருடங்களாக இம்மையத்தின் நெளிமுகுது அறுவை சிகிச்சை குழுவும் (Orthopedic Spione Surgery Team), மயக்கவியல் குழுவும் (Aranthetic Toom) இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட (142) நெளிமுதுகு நோயாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நெளிமுதுகு அறுவை சிகிச்சைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு உதவும் வகையில் முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தில் சிறப்புத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நெளிமுதுகு சீர்செய்யும் அறுவை சிகிச்சையில் ஏற்படும் சிக்கல்களை முன்னறிந்து, அதைத் தவிர்த்து, பாதுகாப்பான முறையில் அறுவை கிசிச்சை செய்வதற்கான நவீன தொழில் நுட்பங்களையும் (3D Printing) இங்குள்ள மருத்துவர்கள் மேற்கொள்கின்றனர்.

சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் (IIT-Madras) இணைந்து, நெளிமுதுகு நோய் சிகிச்சைக்கு உதவும் நவீன தொழில் நுட்பங்களையும் (3D Printing) இங்குள்ள மருத்துவர்கள் மேற்கொள்கின்றனர். சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் நவீன தொழில்நுட்பம் சாா்ந்த ஆராய்ச்சிகள் (3D Printing, Robotic Surgery) இம்மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நெளிமுதுகு நோயினால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு தண்டுவட சீரமைப்பு அறுவை சிகிச்சை இம்மையத்தில் வெற்றிகரமாக செய்யப்பட்டது. மிகவும் சிக்கலாக வளைந்திருந்த முதுகுத்தண்டை இங்குள்ள நெளிமுதுகு அறுவை நிபுணர்கள் சீர் செய்த பிறகு தோற்ற உருக்குலைவு சீரடைந்து, எழிலான தோற்றத்துடன் வீடு திரும்பினார்'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நாட்டுவெடியைக் கடித்ததால் வாயில் காயமடைந்த பாகுபலி யானை - நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details