தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 14, 2020, 6:16 PM IST

Updated : Dec 14, 2020, 9:17 PM IST

ETV Bharat / state

கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ. 375 கோடி நிதி - தமிழ்நாடு அரசு தகவல்

Madras High court
சென்னை உயர் நீதிமன்றம்

18:08 December 14

சென்னை: கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கல்வி செலவுத் தொகையாக 2019-20ஆம் கல்வியாண்டுக்கு ரூ. 375 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டதை எதிர்த்தும், 2017-18, 2018-19, 2019-20ஆம் கல்வியாண்டுகளில் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2019-20ஆம் ஆண்டுக்கான நிலுவை தொகையை டிசம்பர் 14ஆம் தேதிக்குள் செலுத்த கடைசி வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்தார். அவ்வாறு செலுத்தாதபட்சத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் உரிய அளிக்க வேண்டும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு மீண்டும் இன்று (டிசம்பர் 14) விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019-20ஆம் ஆண்டுக்கான செலவுத்தொகையாக ரூ. 375 கோடியே 89 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு செலுத்துவதற்கான நடைமுறையை தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கை இறுதி விசாரணைக்காக ஜனவரி 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசின் பொங்கல் பை திட்டத்தில் 100 மி.லி. நெய் பாட்டில் - மதுரை ஆவின் அறிவிப்பு

Last Updated : Dec 14, 2020, 9:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details