சென்னை:அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை ஏற்பட்ட போது ஆரம்பத்தில் ஓபிஎஸ்-க்கும், ஈபிஎஸ்-க்கும் நடுநிலையாக நடந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஒரு கட்டத்தில் ஓபிஎஸ்-சின் வலது கரமாக மாறினார். அதற்கு காரணம் சசிகலா என்று கூறப்பட்டது. அதிமுகவில் சசிகலாவை இணைக்க பலகட்ட முயற்சிகளை வைத்திலிங்கம் மேற்கொண்டர். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை என்பதில் உறுதியாக இருந்தார்.
வைத்திலிங்கம் முயற்சி: ஒற்றைத் தலைமை பிரச்சனையில் ஓபிஎஸ் அணியில் பயணம் செய்த வைத்திலிங்கம், அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை இணைக்க முயற்சி செய்தார். இதற்கு முதலில் மக்கள் மத்தியில் ஓபிஎஸ்-சின் செல்வாக்கை நிரூபிக்க நினைத்த வைத்திலிங்கம், திருச்சியில் ஏப்ரல் 24ஆம் தேதி மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் சசிகலா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பங்கேற்கவில்லை.
டிடிவி தினகரனுடன் சந்திப்பு:அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகவே நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கின. இதனால், முதலில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் வைத்திலிங்கம். டிடிவி தினகரனின் இல்லத்துக்கு சென்ற ஓபிஎஸ் மற்றும் அவரது அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அதிமுகவை மீட்டெடுக்க இருவரும் ஒன்றிணைவதாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூறினர். இதில், அதிமுகவை மீட்டெடுக்க ஓபிஎஸ் சட்ட ரீதியாகவும், டிடிவி தினகரன் அமமுக கட்சி ரீதியாகவும் போராடுவார்கள் என பண்ருட்டி ராமச்சந்திரன் குறிப்பிட்டார். ஆனால், இந்த சந்திப்பிற்கு பிறகு இரண்டு தரப்பில் இருந்தும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் செய்யப்பட்டதாக தெரியவில்லை.
தாமதம் ஏன்?: டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்திருக்கும் நிலையில் சசிகலாவை எப்போது சந்திக்க உள்ளார் என கேள்வி எழுந்தது. அதற்கு, சசிகலா சென்னையில் இல்லை என்றும், விரைவில் சசிகலாவையும் நேரில் சென்று சந்திப்பதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சேலத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டிருந்த ஓபிஎஸ், சசிகலாவிற்கு அழைப்பு விடுக்க உள்ளார் என பேசப்பட்டது. ஓபிஎஸ்-சசிகலா சந்திப்பு ஏன் நிகழவில்லை என சசிகலா தரப்பில் விசாரிக்கும் போது, “பலமுறை ஓபிஎஸ் தரப்பில் இருந்து சசிகலாவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பலமுறை நேரம் கேட்டார். ஆனால், சசிகலா ஓபிஎஸ் தரப்பினருடன் கைகோர்ப்பதை கடந்து, பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என முயற்சியை எடுத்துள்ளார். மறுபுறம் டிடிவி தினகரனும், சசிகலாவிற்கும் அரசியல் ரீதியாக சுமூக உறவு இல்லை. இதனால், ஓபிஎஸ்வுடனான சந்திப்பிற்கு தாமதம் ஆகிறது” என கூறப்பட்டது.