சென்னை:தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா(38). இவர் நெடுங்குன்றம் சூர்யா என அழைக்கப்படுகிறார். சூர்யா மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி விஜயலட்சுமி நெடுங்ன்றம் ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இந்நிலையில் பாஜகவில் இணைந்துள்ள பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவிற்கு பாஜகவில் பட்டியல் அணி மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தாம்பரம் அடுத்த செம்பாக்கம் துர்கா காலனியில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது பேசிய நெடுங்குன்றம் சூர்யா, "ஒருங்கிணைந்த மனித நேய அம்பேத்கர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராக உள்ளேன். எனது மனைவி பாஜக மகளிர் அணியில் உள்ளார். நரேந்திர மோடி மற்றும் அண்ணாமலையின் பணிகளை பார்த்து ஈர்க்கப்பட்டும், தன் மனைவி பாஜகவில் இருக்கும் திட்டங்களை எங்கள் பகுதியில் செய்து வருவதை பார்த்தும் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன்.
மாநிலத் தலைவர் அண்ணாமலை வேலை பார்க்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எங்களது வகுப்பின மக்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் தேடி தேடிச் செய்யும் தலைவராக அண்ணாமலை உள்ளார். அவரின் ஆளுமை பிடித்ததால், இந்த கட்சியில் நாங்கள் இணைந்துள்ளோம். எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பாக பணியாற்றுவோம். அண்ணாமலைக்கு உறுதுணையாக இருப்போம்" என்றார்.