தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு.. பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்ட கருக்கா வினோத்.. - வெடிபொருள் தடைச்சட்டம்

Rowdy Karukka Vinod: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி கருக்கா வினோத் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.

Rowdy Karukka Vinod
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்ட கருக்கா வினோத்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 11:04 PM IST

சென்னை: சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ரவுடி கருக்கா வினோத். இவர் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதனைப் பற்ற வைத்து ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசினார். இதை அடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் கருக்கா வினோத்தைக் கைது செய்து, கிண்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளதும், ஓராண்டாகச் சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 14ஆம் தேதி ரவுடி கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தமிழக காவல்துறை, என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் அண்மையில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தன்று பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சில்வான் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடுத்தகட்டமாக, ரவுடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி என்.ஐ.ஏ தரப்பில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய அன்று (அக் 25) பணியில் இருந்த காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் என பலரையும் விசாரிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதியே உடனடியாக கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதை அடுத்து அவர்மீது போடப்பட்ட குண்டர் சட்டம் அவசரகதியில் போடப்பட்டதா? உரிய காரணங்களின் அடிப்படையில் போடப்பட்டதா? என விசாரணை செய்யும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு குண்டர் சட்டம் போடப்பட்ட ரவுடி கருக்கா வினோத் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையும் படிங்க:கிருஷ்ண ஜென்மபூமி நில விவகாரம்: ஷாஹி இத்கா மசூதியை ஆய்வு செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details