இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. ஆனால், ஒரு சில இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி, பலர் வாகனங்களிலும், தெருக்களிலும் சுற்றித் திரிகின்றனர். இவர்களை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். காவல் துறையினர் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து கரோனா பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிந்து அழைத்து வரும் பணியிலும், கரோனா தாக்கிய நபரின் தெரு முழுவதையும் சீலிட்டு அப்பகுதியினரை வெளியே செல்லவிடாமல் அங்கு பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நபர், தப்பித்துச் செல்ல வாய்ப்பு உள்ளதால், வார்டுக்கு வெளியே பாதுகாப்புப் பணியிலும், சட்டம் ஒழுங்கு பணிகளையும் கவனித்து வருகின்றனர். இதனால், காவலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பணி நேரத்தை விட கூடுதலாக காவலர்கள் பணி செய்து வருகின்றனர். ஏற்கெனவே தேர்வாகி பயிற்சியில் உள்ள காவலர்கள் அனைவரும் மே-3ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.