கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.
ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவ, மாணவியர்கள் முயற்சிக்கும்போது ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால் அந்த இணைய தளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இதேபோல், ஆன்லைன் வகுப்புகளை மொபைல், லேப்டாப் மூலம் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும் அந்த மனுவில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை முதல்வர் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தார்.