தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 3, 2023, 10:13 PM IST

ETV Bharat / state

Odisha Train Accident: ரயில் விபத்தில் தமிழர்கள் உயிரிழப்பு? மீட்புக் குழு என்ன கூறியது?

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவிடும் வகையில் ஒடிசா சென்ற குழுவினருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக மீட்புப் பணிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

rescue team include ministers said that still now Tamilians not identified among the victims of the Odisha coromandel train accident
rescue team include ministers said that still now Tamilians not identified among the victims of the Odisha coromandel train accident

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன். 3) மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒடிசா சென்ற தமிழ்நாட்டு குழுவினருடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ரயில் விபத்தில் இறந்தவர்களில் தமிழர்கள் யாரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று ஒடிசா சென்ற மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்திடவும் தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு உடனடியாக ஒடிசா அனுப்பி வைக்கப்பட்டனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், மற்றும் ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஒடிசா சென்றனர்.

தமிழக அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை கண்காணித்து உதவினர். மற்றொரு குழுவான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் ரயில் விபத்தில் உயிரிந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை சேகரித்தனர்.

இந்நிலையில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், பாலசோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, விபத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து வந்ததாகவும், ஆனால் அந்த மருத்துவமனையில் தமிழ்நாட்டைச் நேர்ந்த எவரும் இதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், ஒடிசா தலைநகர் கட்டாக்கில் உள்ள எஸ்.வி.பி. மருத்துவமனையில், விபத்தில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களின் விவரங்களை அவர்கள் சேகரித்து வந்ததாகவும், தற்போது வரை அந்த மருத்துவமனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

பாலசோர் நகரத்தில் உள்ள 4 இடங்களில், விபத்தில் இறந்த 237 நபர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை இறந்தவர்களில் 70 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என்றும் அங்குள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாக, தமிழ்நாடு முதலமைச்சரிடம், மீட்பு பணிக்கு சென்றுள்ள குழுவினர் தெரிவித்தனர்.

தென்னக ரயில்வேயின் பயணிகளின் முன்பதிவுப் பட்டியல் படி, விபத்தில் சிக்கிய ரயில்களில் பயணம் செய்தவர்களின் விவரங்கள், அவர்களது உறவினர்களிடம் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு குழுவினர், மேலும் சில தினங்கள் அங்கு தங்கியிருந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக சென்னை வந்தடைவதை உறுதி செய்திட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், சென்னையில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில், இதுவரை பெறப்பட்ட விவரங்கள் குறித்தும், அதன் செயல்பாடு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அரசு உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அரசு அலுவலர்கள் முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து ஆலோசித்தனர்.

இதையும் படிங்க: Odisha Train Accident: குலுங்கிய ரயில், பிணக்குவியல்: விபத்தில் சிக்கி மீண்டவர்களின் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details