சென்னை:நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று (ஜன.26) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில், உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கி வரும், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் பணி காலத்தை நிறைவு செய்த ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கு பொறுப்பு சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார். பின்னர் உயர்நீதிமன்ற ஊழியர் எஸ்.கார்த்திக் என்பவர், தமிழ்நாட்டின் பராம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் சுற்றி காட்டினார்.