தமிழ்நாட்டில் ஈழ விடுதலை என்பது எப்போதும் உணர்வுபூர்வமான ஒன்றாக இருந்துவருகிறது. ஈழத் தமிழர்களுக்காகவும், எழுவர் விடுதலைக்காகவும் தமிழ்நாட்டில் பலர் உயிரை தியாகம் செய்துள்ளனர். ஆனால், இவர் ஒருவரின் தற்கொலை சம்பவம் இந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என எவரும் எண்ணியிருக்க மாட்டார்கள். 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த செங்கொடியின் தீக்குளிப்பு தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போதுதான், யார் இந்த செங்கொடி எனப் பலர் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கான பதில் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் கிடைத்தது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் எழுப்பிவரும் அமைப்புகளில் காஞ்சிபுரம் மக்கள் மன்றமும் ஒன்று. இங்கிருந்து ஒலித்த ஜனநாயக குரல்தான் செங்கொடி.
சிறுவயதிலிருந்து மக்கள் பிரச்னைகளில் ஆர்வம் காட்டிவந்த செங்கொடி பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர் ஆவார். காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் ஈழத் தமிழர்கள் அனுபவிக்கும் துன்பங்களை பறையாட்டம் மூலம் மக்களிடையே கொண்டுச் சேர்ப்பவர் செங்கொடி. இப்படிப்பட்ட இவர் தீக்குளிப்பதற்கு முக்கிய காரணம் குடியரசு தலைவரின் அந்த செயல். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் நிராகரித்தார். எப்போது வேண்டுமானாலும் எழுவரும் தூக்கில் போடப்படுவார்கள் என்ற நிலையில், தமிழ்நாடு போராட்டக்களமாக மாறியது. இதனைத் தொடர்ந்து செங்கொடி வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று மண்ணெண்ணெயை ஊற்றி பற்ற வைத்து தீக்குளித்தார். கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.