இஸ்லாமிய அமைப்பான எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த உமர் பரூக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில், ”இந்தியாவில் கரோனா வைரஸ் பரவியதை மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் உறுதிசெய்தது. கடந்த மார்ச் 7ஆம் தேதி ஓமனிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்த நபருக்கு தொற்று இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்தது.
சீனாவில் கடந்த டிசம்பரில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்தபோது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மார்ச் 14ஆம் தேதிக்கு பிறகு கரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கைவிடுத்தும் பொதுக்கூட்டம், மத நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கவில்லை. மார்ச் 20ஆம் தேதிவரை இந்தியாவிற்கு வருபவர்களைத் தனிமைபடுத்தும் உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டது.
டெல்லி சமய மாநாட்டில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் பங்கு பெற்றுவருகின்றனர். எந்த நாட்டிலிருந்து யார், எவ்வளவு பேர் வந்துள்ளனர் என்ற விவரங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்து கூட்டத்திற்கு உரிய அனுமதி பெறப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கால் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் டெல்லியில் தங்கியிருந்த ஆயிரத்து 500 பேரை போக்குவரத்து வசதி செய்துதராமல் உடனே காலிசெய்ய வேண்டும் எனக் காவல் துறை தெரிவித்தது. தப்லிக் ஜமாத் நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு சிலருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோதும், பரிசோதனைக்கு ஜமாத் நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.