சென்னை மாநராட்சியில் 69 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்பணிக்கு 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 440 பேர் நேர்முகத் தேர்வுக்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டு, 54 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரியும், தனக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும் கருணை அடிப்படையில் 2016ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், உரிய தகுதி இருந்தும், முறையாக விளம்பரங்கள் செய்யப்படாததால், தன்னால் இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகளில் கலந்து கொள்ள முடியவில்லை. உரிய விதிகளையும், இடஒதுக்கீட்டு நடைமுறையையும் பின்பற்றாமல் 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரின் செல்வாக்கு காரணமாக இவர்கள் அனைவரும் ஒரே நாளில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்த போது, கோவை மாநகராட்சி தரப்பில், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று இரண்டு மாலை பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டதாகவும், அதற்கு 3 லட்சம் ரூபாய் செலவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பணி நியமனத்தில் யாருக்கும் எந்த சலுகையும் காட்டப்படவில்லை. உரிய தேர்வு நடைமுறைகளையும், இடஒதுக்கீட்டு முறையையும் பின்பற்றி நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.