தமிழ்நாடு

tamil nadu

சிற்றுந்துகளின் எண்ணிக்கை குறைப்பு: பயணிகள் அவதி

By

Published : Dec 10, 2021, 7:13 PM IST

சென்னையில் சிற்றுந்துகளின் எண்ணிக்கை குறைப்பால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

மினி பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு
மினி பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு

சென்னை:மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்பட்டுவந்த 200 சிற்றுந்துகளில் தற்போது 75 முதல் 100 மட்டுமே இயக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நகரின் உள்பகுதிகளிலிருந்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்குப் பயணம் செய்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகிறார்கள்.

போக்குவரத்து அலுவலர்களின் கூற்றுப்படி, சிற்றுந்துகள் சென்னை நகரத்தின் முக்கியப் பகுதிகள், புறநகரின் உள்பகுதிகளில் பயணிகளை ரயில் நிலையங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கும், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் கொண்டுசெல்ல உதவியது. ஆனால் தற்போது சிற்றுந்துகள் பிரதான சாலையிலும் சரி, உள்பகுதியில் உள்ள சாலைகளிலும் சரி அரிதாகவே காணப்படுகின்றன.

சிற்றுந்துகளின் எண்ணிக்கை குறைப்பு

இது குறித்து மாநகரப் பேருந்து நடத்துநர் ஒருவர் கூறுகையில், "கரோனா தொற்று முதல் அலை வருவதற்கு முன்பே சிற்றுந்துகளின் எண்ணிக்கையை மாநகரப் போக்குவரத்துக் கழகம் போதுமான வருமானம் இல்லை எனக்கூறி குறைத்துவிட்டது.

கரோனா தொற்று முழுவதுமாகக் கட்டுப்படுத்திய பின்பு மேலும் 100 சிற்றுந்துகளை இயக்கலாம் என அலுவலர்கள் கூறினார்கள். எனினும் தொற்றின் நிலைமை கட்டுக்குள் வந்த பிறகுகூட சிற்றுந்துகள் ஒரு சில பணிமனைகளில் இயங்காமல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன" என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் சிட்டிசன் செந்தில் கூறுகையில், "நகரின் உள்பகுதிகளில் வரும் பயணிகளுக்கு சிற்றுந்துகள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. 200 பேருந்துகள் போதுமானதாக இருக்காது என்று கூறி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூடுதலாக 100 சிற்றுந்துகள் இயக்கப்படும் என 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. தற்போது வெறும் 100 பேருந்துகள் மட்டுமே எல்லா பகுதிகளிலும் இயக்கப்படுவதுபோல் தெரிகிறது.

உதாரணமாக சென்னை புறநகர்ப் பகுதியான ஐயப்பன்தாங்கல் பகுதியிலிருந்து குமணன்சாவடி பகுதிக்கு S23 என்ற சிற்றுந்து இயக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்தச் சிற்றுந்து கடந்த இரண்டாண்டுகளாக இயக்கப்படவில்லை. இதனால் ஐயப்பன்தாங்கல் உள்பகுதிகளில் உள்ள பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பேருந்து நிலையத்திற்கு வர அதிக கட்டணம் செலுத்தி ஷேர் ஆட்டோ, ஆட்டோக்களில் வரும் கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

எனவே அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு இனி பேருந்துகளையும் இயக்க வேண்டும் என்பதே அனைத்துப் பயணிகளின் கோரிக்கையாகும்" எனக் கூறினார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சம்மேளனம் மாநிலத் தலைவர் அ. சௌந்தரராஜன் கூறுகையில், "எங்களுடைய கோரிக்கை என்னவென்றால் தற்போதுள்ள 200 சிற்றுந்துகள் போதாது. இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு மேலும் 100 பேருந்துகளை வாங்க வேண்டும். ஏனெனில் சிற்றுந்துகளை இயக்கினால் மாநகரப் பேருந்துகளின் வருமானம் கூடும்" என்றார்.

இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம் நம்மிடம் தொலைபேசி வாயிலாகக் கூறுகையில், "கடந்த ஓராண்டிற்கு முன்பு 75 சிற்றுந்துகள் மட்டும் இயக்கப்பட்ட நிலையில் தற்போது சிற்றுந்துகளின் எண்ணிக்கை 120 ஆக உள்ளது.

மேலும் மற்ற பேருந்துகளைப் படிப்படியாக இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவுசெய்துள்ளது. வருமானம் குறைவாக உள்ளதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது தவறான தகவல்" என்றார்.

இதையும் படிங்க:தேசியவாதிகளை கைதுசெய்யும் அறிவாலய அரசு - அண்ணாமலை கடும் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details