தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 25, 2022, 7:36 PM IST

ETV Bharat / state

பால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் வேண்டும் - ராமதாஸ்

தனியார் பால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

milk rate hike  private milk rate hike  ramdoss statement on private milk rate hike  milk rate in tamil nadu  aavin milk rate  பால் விலை உயர்வு  ராமதாஸ் அறிக்கை  பால் விலை குறித்து ராமதாஸ் அறிக்கை  தனியார் பால் விலை உயர்வு
ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் ஆவின் பால் விலையை விட, தனியார் பால் விலை அதிக விலைக்கு விற்கப்பட்டுவருவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஒழுங்குமுறை ஆணையம் வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயர்வு இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தனியார் பால் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை இன்னும் கடுமையாக பாதிக்கும். இது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.

பால் விலை

தமிழ்நாட்டின் பால் சந்தையில் 45 விழுக்காட்டை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நான்கு தனியார் பால் நிறுவனங்கள், தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு பால் விலையை உயர்த்தியுள்ளன.

மூன்று விழுக்காடு கொழுப்புச் சத்துள்ள பாலின் விலை லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 4.5 விழுக்காடு கொழுப்புச் சத்துக் கொண்ட பாலின் விலை ரூ.58-லிருந்து ரூ.60 ஆகவும், 6 விழுக்காடு கொழுப்புச் சத்துக் கொண்ட பாலின் விலை ரூ.62-லிருந்து ரூ.66 ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதே தரத்திலான ஆவின் பால், லிட்டருக்கு ரூ.40, ரூ.44, ரூ.48 என்ற விலையில் விற்கப்படும் நிலையில், அதை விட லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.18 வரை கூடுதல் விலையில் தனியார் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

3ஆவது முறை உயர்வு

தமிழ்நாட்டில் தனியார் பால் விலைகள், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 9 மாதங்களில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த ஜூன், நவம்பர் மாதங்களில் தனியார் பால் விலைகள் உயர்த்தப்பட்டன. தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை.

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வதைவிட மிகக்குறைந்த விலையில் தான் தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்கின்றன. ஆனால், ஆவின் பாலைவிட 25% முதல் 38% வரை கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்கின்றன.

ஆவின் நிறுவனத்தின் விலைக்கே தனியார் நிறுவனங்கள் பாலை விற்பனை செய்தால் கூட, நல்ல லாபம் ஈட்ட முடியும். ஆனால், தமிழ்நாட்டின் மொத்த பால் சந்தையில் 80 விழுக்காடு தனியாரின் கைகளில் இருப்பதால் அவை தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, பால் விலையை உயர்த்தி கொள்ளை லாபம் ஈட்டுகின்றன.

ஒழுங்குமுறை ஆணையம்

தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை அதிகரிப்பதன் மூலமும், பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பதன் மூலமும் தனியார் பால் விலையை கட்டுப்படுத்த முடியும். வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் நியாயவிலைக் கடைகள் நடத்தப்படுகின்றன. அதே பணியை தமிழ்நாட்டு பால் சந்தையில் ஆவின் நிறுவனமும் செய்ய வேண்டும்.

ஆவின் பால் கொள்முதலை அதிகரித்தால், பால் சந்தை பங்கையும் அதிகரிக்க முடியும். அதன் மூலம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் பால் சந்தையில், குறைந்தது 60 விழுக்காட்டையாவது கைப்பற்றும் அளவுக்கு ஆவின் நிறுவனத்தின் கொள்முதலையும், விற்பனையையும் அதிகரிக்க வேண்டும்.

மற்றொருபுறம் பால் கொள்முதல் மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், அதற்கான விலையை நிர்ணயிக்கவும் பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் தனியார் பால் விலையை கட்டுக்குள் கொண்டு வர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சிக் கட்டணம் குறைப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details